முடிந்தே முடிச்சை அவிழ்ப்பீர் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்



ஸ்ரீரவீஸ்வரர் சிவாலயம், ஆமூர்
தோன்றின் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவர் வாய் மொழி. பிறக்கும்போதே புகழ் பெற்ற மனிதராகப் பிறக்க வேண்டும் என்பது சாதாரண குடிமகன் முதல் மண்ணாளும் மாமன்னன்வரை அனைவரும் விரும்புவதுதான். ஆனால், பிறக்கும்போதே ஒரு குழந்தை புகழுடன் தோன்ற வேண்டுமென்றால் அது பூர்வ ஜென்மங்களில் இப்பிறவிக்குத் தேவையான அபரிமிதமான புண்ணிய சக்தியைச் சம்பாதித்திருந்தால்தான் இது சாத்தியமாகும். அப்படியானால் எப்படிப்பட்ட புண்ணிய சக்தியை ஒரு மனிதன் சம்பாதித்தால் அவன் புகழோடு வாழலாம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஒருவர் எந்த அளவிற்கு சூரிய வழிபாடுகளை மேற்கொண்டு சூரிய சக்திகளைப் பெருக்குகிறாரோ அந்த அளவிற்கு அவர் அடுத்து வரும் பிறவிகளில் பேரும் புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்வார் என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இவ்வகையில் திருச்சி முசிறி சாலையில் உள்ள ஆமூர் திருத்தலத்தில் காவிரிக் கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரவீஸ்வர மூர்த்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சூரிய மூர்த்திகளாலுலும் வணங்கப்படும் ஈஸ்வர மூர்த்தியாகவே திகழ்வது பூலோக மக்களின் பெரும் பேறாகும்.
பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி என்பது போல சூரியன் என்பதும் ஒரு பதவியே. சூரிய மூர்த்திகளுக்கெல்லாம் தலைவராக ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தி விளங்குவதைப்போல சூரிய மூர்த்திகள் எல்லாம் வணங்க வேண்டிய தெய்வ மூர்த்தியாக இருப்பவரே ஸ்ரீரவீஸ்வர சுவாமி ஆவார். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சூரிய மூர்த்திகளும் தினமும் ஸ்ரீரவீஸ்வர மூர்த்தியை வணங்கியே தங்களுடைய அன்றைய பணியைத் தொடங்க வேண்டும் என்பதே இறை சட்டம். மனிதர்கள் இறைவனை வணங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. எந்த அளவிற்கு மனிதன் இறை சிந்தனையோடு வாழ்கிறானோ அந்த அளவிற்கு அவன் மனதால் உயர்ந்து பேரின்பத்தை அடைகிறான். ஆனால், சூரிய மூர்த்திகள் தேவ நிலையை அடைந்த இறை மூர்த்திகளாக விளங்குவதால் அவர்கள் ஸ்ரீரவீஸ்வரரை வணங்கும் தங்கள் தெய்வீக கடமையிலிருந்து தவறுவது கிடையாது. மேலும் சூரியன் என்பது ஒரு பதவியாக இருப்பதால் புதிதாக ஒரு சூரிய மூர்த்தி எந்த லோகத்தில் நியமிக்கப்பட்டாலும் அவர் முதலில் ஸ்ரீரவீஸ்வரரை வணங்கியே தன்னுடைய பொறுப்பை நிர்வகிக்க வேண்டும் என்பதும் தெய்வ சட்டமே.



ஸ்ரீஓமாமாம் சித்தர் ஜீவாலயம், ஆமூர் சிவாலயம்
சூரிய பகவான் காலையில் உதயமாகும்போதும், மதிய நேரத்திலும், மாலையில் மறையும்போதும் வெவ்வேறு சக்திப் பரிமாணங்களுடன் திகழ்வது அனைவரும் அறிந்ததே. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தாலும், சூரிய கதிர்களின் கோண அளவாலும் ஏற்படுவதே என்று நாம் கூறினாலும் இதற்குப் பின்னால் அமைந்துள்ள இரகசியங்கள் கோடி கோடியாகும். இங்கு சூரிய பகவானின் மூன்று கோண சக்திகளைப் பற்றி மட்டும் விளக்குகிறோம்.



தின்ன கோணம், கன்னி கோணம், பரிதி கோணம் என்பவை சூரிய பகவான் இந்த பூமண்டலத்தில் வர்ஷிக்கும் மூன்று முக்கியமான கோண சக்திகளாகும். கன்னி கோண சக்திகள் காலையில் சூரியன் உதிக்கும்போது பூமியைத் தழுவும் சக்திகள். தின்ன கோணம் என்பது நண்பகலில் சூரியன் தலைக்கு நேராக செங்குத்தாக இருக்கும்போது தோன்றும் ஆதவ சக்திகள். பரிதி கோணம் என்பது சூரிய பகவான் பூமியிலிருந்து பகல் பொழுதின் நிறைவாக மீளும் கோண சக்திகள். இதில் தின்ன கோண சக்திகள் பொங்கிப் பெருகும் நேரமே அபிஜித் முகூர்த்தம் எனப்படுகிறது. இத்தகைய மங்கள சக்திகள் நிறைந்த அபிஜித் முகூர்த்தத்தில் தோன்றிய பெருந்தகையே ஸ்ரீஓமாமாம் சித்தர் ஆவார். ஓமாமாம் சித்தர் தோன்றிய அவதாரத் தலம் திருச்சி ஆமூர் அருகிலுள்ள தின்னகோணம் என்னும் கிராமம் ஆகும். ஆமூர் ஸ்ரீரவீஸ்வரர் சிவாலயத்தில் கன்னி மூலையில் இங்கு நீங்கள் தரிசிக்கும் சிவலிங்க மூர்த்தியில் அவர் ஐக்கியம் அடைந்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.



தின்னகோணம் சிவாலயம்
ஓமாமாம் சித்தரின் இயற்பெயர் பரிதியப்பர் என்பதே. ஓமாமாம் சித்தரின் பெற்றோர்கள் சூரிய பூஜையில் சிறந்து விளங்கியதால் தஞ்சை ஒரத்தநாடு நெடுஞ் சாலையில் உள்ள பரிதிநியம திருத்தல ஈஸ்வரரின் நாமமான பரிதியப்பரை குழந்தைக்கு சூட்டி வளர்த்தனர். ஓமாமாம் சித்தர் யார் எதைக் கேட்டாலும் ஓம் என்ற பதத்தில் ஆரம்பித்தே அவர் பதில கூறியதால் மக்கள் நாளடைவில் அவரை ஓமாமாம் சித்தர் என்று அழைக்க ஆரம்பித்தனர். உதாரணமாக, ஒருவர் அவரிடம், “சுவாமி, இன்றைய திதி என்ன ?” என்று கேட்டால் அதற்கு அவர், “ஓம் இன்று பௌர்ணமி திதி,” என்பார். ஒருவர் அவரிடம், “சுவாமி, உங்களுக்கு பால் வேண்டுமா ?“ என்று கேட்டால், “ஓம், அடியேனுக்கு எதுவும் வேண்டாம்,” என்று எந்த பதிலைக் கூறுவதாக இருந்தாலும் அவர் ஓம் என்று சேர்த்தே கூறியதால் ஓம் ஆமாம் சித்தர் ஆனார். பிரணவ இரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர் இவர் ஒருவரே என்பதால் இவரை பிரணவ சித்தர் என்றும் அழைப்பதுண்டு. சூரிய வழிபாட்டிலும் சக்தி உபாசனையிலும் உன்னத நிலையை அடைந்தவர். முதன் முதலில் அம்பாளிடம் ஞானப்பால் பெற்றவரே ஓமாமாம் சித்தர் என்பது சித்தர்கள் அறிவிக்கும் ஞான இரகசியமாகும். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தோன்றுவதற்கு முன்னரே ஓமாமாம் சித்தர் ஆமூரில் ஜீவ சமாதி ஐக்கியம் கொண்டு விட்டார். சம்பந்தர் பிறந்த நாள் முதலாக தினமும் மனவெளி மார்கமாக ஆமூர் வந்து ஓமாமாம் சித்தர் பிரானை தரிசனம் செய்து அதன் பயனால் மூன்று வயதில் அம்பாளிடம் ஞானப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார். அதனால் ஓமாமாம் சித்தருக்கு ஞானப்பால் சித்தர் என்ற நாமமும் பிரசித்தம் ஆயிற்று.



நந்தி மூர்த்தி, தின்னகோணம்
பிரணவம் என்பது இறை சக்தியின் முழுமையைக் குறிப்பதால் பிரணவத்தின் பொருளை விளக்க வந்த பிரணவ சித்தரின் வாழ்க்கையும் முழுமையாக அமைந்தது. ஓமாமாம் சித்தர் 120 வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்தார். உண்மையில் ஜோதிட ரீதியாக மனித வாழ்க்கை என்பது 120 வருடங்கள் கொண்டதே. எதற்காக இறைவன் மனிதனுக்கு 120 வருடங்கள் அளித்தான் ? இதை விளக்குவதாக அமைந்ததே ஓமாமாம் சித்தரின் தெய்வீக வாழ்க்கை. ஏற்கனவே கூறியது போல் சூரிய பகவான் மூன்று கோண சக்திகளுடன் திகழ்கிறார் அல்லவா ? கன்னி கோணம், தின்ன கோணம், பரிதி கோணம் என்று மூன்று கோண சக்திகளையும் சூரிய பகவான் மூன்று சிவ மூர்த்திகளை தரிசனம் செய்தே பெறுகிறார். அதாவது காலையில் சூரிய உதயத்தின்போது ஆமூர் ஸ்ரீரவீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை வணங்கி கன்னி கோண சக்திகளையும், நண்பகல் ஸ்ரீபசுபதீஸ்வரரை தின்னகோணத்தில் வணங்கி தின்ன கோண சக்திகளையும் மாலை அஸ்தமன நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பரிதிநியமம் திருத்தலத்தில் அருள்புரியம் ஸ்ரீபரிதியப்பரை வணங்கி பரிதி கோண சக்திகளையும் பெறுகிறார்.



ஓமாமாம் சித்தர் இந்த மூன்று தலங்களையும் முறையாக வணங்கி சூரிய பகவானின் அனுகிரக சக்திகளை மக்களுக்கு வாரி வழங்கி அருந்தொண்டாற்றி வந்தார். இதற்காக அவர் ஆற்றிய வழிபாடே பிறைக்குள் பிறை சூரிய வழிபாடு என்பதாகும். அமாவாசை, பௌர்ணமிக்கு அடுத்து வரும் 15 நாட்கள் கூடிய ஒரு பட்சத்தை வளர் பிறை, தேய் பிறை என்கிறோம் அல்லவா. இந்த இரு பட்சங்களிலும் ஆமூர், தின்னகோணம், பரிதிநியமம் திருத்தலத்தில் உள்ள இறை மூர்த்திகளை நடந்து சென்று தரிசனம் செய்து வருவதே பிறைக்குள் பிறை சூரிய வழிபாடு ஆகும். இந்த கணக்கில் ஒரு வருடத்திற்கு சுமார் 25 பிறை வழிபாடுகள் என கணக்கிட்டால் 40 வருடத்தில் ஆயிரம் பிறை வழிபாடுகள் நிறைவேற்றலாம். இவ்வாறாக 120 வருடங்களில் மூவாயிரம் பிறை வழிபாடுகளை நிறைவேற்றி கன்னி கோணம், தின்ன கோணம், பரிதி கோண சூரிய சக்திகளை உலகிற்கு அளித்து அருந் தொண்டாற்றியவரே ஓமாமாம் சித்த பிரான் ஆவார்.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆமூர் சிவத்தலம்
பெரும்பாலான சிவத்தலங்களில் கன்னி மூலையில் கணபதி எழுந்தருளி கன்னி மூலை கணபதியாக அனுகிரகங்களை அளிக்கிறார். கன்னி மூலை திருமணத் தடங்கல்களைக் களைவதுடன் நல்ல புத்தியைத் தருவதும், பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதுமாக அமைகிறது. அவ்வாறு கன்னி மூலை கணபதி எழுந்தருளாத சிவத்தலங்களில் அங்கு வழிபடும் மக்களின் திருமணம், கல்வி சம்பந்தமான பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவரே ஓமாமாம் சித்த பிரானாவார். இவ்வாறு ஒவ்வொரு திருத்தலத்திலும் சூட்சுமமாக நடைபெறும் தெய்வீக லீலைகள் கோடி கோடி.
கன்னி கோண சக்திகளே சூரிய பகவான் முதலில் அருளும் சக்திகளாக இருப்பதால் கன்னி சக்திகளுக்கான உரித்தான ஆமூர் சிவத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில் இத்தல மூலவர் மேல் தன்னுடைய பாசக் கிரணங்களைப் பொழிந்து சூரிய பூஜை நிகழ்த்தும் அற்புதத்தை இன்றும் பக்தர்கள் தரிசித்து மகிழலாம். இந்த மூன்று நாட்கள் பாஸ்கர பூஜை தரிசனத்தால் பெறும் பலன்கள் ஒரு வருடத்திற்கு மக்களுக்குத் தேவையான கன்னி கோண சக்திகளை அளிக்கின்றன. இதுவே இறைவனின் பெருங் கருணை. இறைவனுக்கு கறந்த பால் அபிஷேகமும் கரும்புச் சாறு அபிஷேகமும் சிறப்புடையதாகும். சீம்பாலால் செய்த இனிப்புகள் தானத்தால் அற்புத பலன்களைப் பெறலாம். எத்தகைய திருமண தோஷங்களையும், தோல் நோய்களையும் நிவர்த்தி செய்யும் அற்புத வழிபாடாகும். தோன்றின் புகழொடு தோன்றுக என்று வள்ளுவர் வாய் மொழிக்கேற்ப தோன்றும்போதே புகழுடன் சிறக்கும் குழந்தைகளைப் பெற வழிவகுப்பதே ஆமூர் சிவத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடாகும்.
வாழ்க்கையில் எந்தத் துறையில் உள்ளவர்களும் சிறப்புப் பெற உதவுவதே ஆமூர் சிவத்தலமாகும். சாதக சக்திகள் நிறைந்த (positive vibrations) ஒரே தலம் இதுவே ஆகும். காரணம் ஊரின் பெயரே ஆம் ஊர். ஓமாமாம் சித்தரின் சாதக சக்திகள் எப்போதும் பரிணமிக்கும் திருத்தலமாதலால் எத்தகைய எதிர்மறை எண்ணங்களையும் முறியடித்து காரிய சாதனையை நிறைவேற்றும் தலமாக இது விளங்குகிறது.

சூரியக் கதிர்களில் தின்ன கோணம், கன்னி கோணம், பரிதி கோணம் என்ற மூன்று கோண சக்திகள் மட்டும் அல்லாது சூரியக் கதிர்களில் ஆம் என்ற பீஜாட்சர வேத சக்தியும் இணைந்துள்ளது. இந்த வேத சக்திகளை உலக மக்களுக்கும் ஏனைய ஜீவன்களுக்கும் ஈர்த்து வழங்கும் சேவையில் இத்தல பைரவ மூர்த்தியுடன் இணைந்து ஓமாமாம் சித்தர் பணிபுரிவதால் ஓமாமாம் சித்தர் என்பது ஒரு காரணப் பெயரே என்பது இப்போது நமக்குப் புரிகின்றது அல்லவா?



ஸ்ரீபசுபதீஸ்வரர் தின்னகோணம்
நட்சத்திரங்களுள் சிறந்ததாக மூல நட்சத்திரம் விளங்குவதைப் போல முகூர்த்தங்களுள் சிறப்பான இடத்தைப் பெறுவதே அபிஜித் முகூர்த்தமாகும். அபிஜித் என்பது கால அளவு கிடையாது, இது ஒரு கோண சக்தியே என்பது சித்தர்கள் கூறும் இரகசியத்திலும் இரகசியமான தெய்வீக உண்மையாகும். எப்படி அபிஜித் நட்சத்திரம் என்பது ஜோதிட ரீதியாக கணக்கிட முடியாததாக உள்ளதோ அதுபோல அபிஜித் முகூர்த்த நேரத்தையும் கால அளவால் உறுதியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. சுயம்பு மூர்த்தியாக தின்னக்கோணத்தில் விளங்கும் ஸ்ரீபசுபதீஸ்வரரின் பூரண அனுகிரகத்தைப் பெற்ற ஓமாமாம் சித்தர் போன்ற உத்தமர்களே அபிஜித் முகூர்த்த நேரத்தை, அபிஜித் கோண சக்திகள் பூரிக்கும் நேரத்தை துல்லியமாகக் கணக்கிட்டுக் கூற முடியும். ஒவ்வொரு நாளும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் சூரிய பகவான் தின்னகோணத்தில் சுயம்பு வடியாய் எழுந்தருளி இருக்கும் ஈசனை தன் கிரணங்களால் தரிசனம் செய்து வழிபடும்போது தோன்றுவதே அபிஜித் முகூர்த்த சக்திகளாகும். எனவே எவர் ஒருவர் தின்னகோண இறைவனின் சுயம்பு மூல சக்திகளை ஊனக் கண்களால் தரிசனம் செய்யும் சக்தி பெற்றிருக்கிறாரோ அவரே அபிஜித் முகூர்த்தத்தை துல்லியமாகக் கணக்கிட்டுக் கூற முடியும். இந்த அபிஜித் முகூர்த்தம் என்பது கால பரிமாணத்தைக் கடந்த கோண சக்தியாக அமைவதால் நள்ளிரவிலும் அபிஜித் முகூர்த்தம் அமையலாம் என்பது விந்தையிலும் விந்தையான செய்தியாகும்.



சிவசக்தி ஐக்கிய தரிசனம், திருஅண்ணாமலை
ஒருவர் தலைக்கு மேல் நேராக சூரியன் பிரகாசிக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தம் என்று கணக்கிடுகிறோம். ஆனால், சூரிய பகவான் திருஅண்ணாமலையின் குறுக்கே செல்லாது மலையை வணங்கி வலமாகச் செல்லும்போது அங்கே அபிஜித் முகூர்த்தம் எப்படி அமையும் என்பதை குறித்து ஆத்ம விசாரம் செய்வதால் அபிஜித் முகூர்த்தம், சூரிய பகவானின் கிரண கோணங்களின் தன்மையைப் பற்றிய மேலும் பல அற்புத விளக்கங்கள் புலனாகும்.
இயற்பகை நாயனார் தன்னுடைய மனைவியை ஒரு சிவனடியாரின் போகத்திற்காக தாரை வார்த்து அளித்தபோது சிவபெருமான் அவருக்கு விடை வாகனத்தின்மேல் ரிஷபாரூடராக காட்சி அளித்தார் என்பதை நாம் அறிவோம். உண்மையில் அப்போது சிவபெருமான் இயற்பகை நாயனாருக்கு அபிஜித் முகூர்த்தம் என்னும் ஜோதி வடிவே விடை வாகனமாக அமைய அதன் மேல் எழுந்தருளி திருக்காட்சி நல்கினார் என்பது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அளிக்கும் சுவையான வரலாறு ஆகும். இயற்பகை நாயனாரின் சேவையை ஊன்றி உணர்ந்தால் இந்த உண்மை தெரிய வரும். இறைவன் இயற்பகை நாயனாரை, “இயற்பகை முனிவா ஓலம் ...“ என்று கூறி அழைக்கும்போது பஞ்சாட்சர சக்திகளையே அபிஜித் முகூர்த்த சக்திகளாக்கி விடை வடிவாய் காட்டி அருளினார். பெருமானின் அழைப்பில் தோன்றிய ஐந்து ஓலங்கள் இந்த பஞ்ச பூத சக்திகளின் எதிரொலியாய் தோன்றியவையே.



பரிதிநியமம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பின் தோன்றிய அமுதத்தை பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு விநியோகம் செய்தார் அல்லவா ? அப்போது அந்த விருந்தில் ராகு, கேது என்ற இரு அசுரர்களும் கலந்து கொண்டு அமிர்தத்தை உண்ண முயன்றபோது சூரிய பகவான் அவர்கள் தேவர்கள் அல்லர், அசுரர்களே தேவ வடிவில் வந்துள்ளனர் என்று பெருமாளுக்கு தெரிவிக்கவே பெருமாள் அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு அமிர்தக் கரண்டியால் அவர்களைத் தட்டினார். இதனால் பெரிதும் கோபம் கொண்ட ராகுவும் கேதுவும் சூரியன் தன்னுடைய ஆதவ சக்திகளை இழக்கும்படி சபித்து விட்டனர். இவ்வாறு தன்னுடைய பாஸ்கர சக்திகளை இழந்த சூரிய பகவான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
பிரச்னை என்று வந்து விட்டால் குழந்தைகள் தங்கள் தாயிடமோ தந்தையிடமோ சென்றுதானே
முறையிடுவார்கள் ?
அதுபோல சூரிய பகவானும் தன்னுடைய தந்தையான காச்யப மகரிஷியை நாடி தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறும் மார்கத்தை எடுத்தருளுமாறு கேட்டுக் கொண்டார். காச்யப மகரிஷியும் தன்னுடைய தனயனுக்கு நல்லுரை கூறினார். ‘ஒருவர் கொடுக்கும் தானத்தை தடுப்பவனும், விருந்திற்கு வந்தவனை காட்டிக் கொடுப்பவனும் ஆறாத் துயரில் ஆழ்வான்,‘ என்பது விதி. எனவே சூரிய பகவான் பெற்ற சாபத்தை அனுபவித்துத்தான் தீர வேண்டும். இருந்தாலும் தகுதியற்றவர்களுக்கு பெருமாளின் பிரசாதம் சென்றடைந்து விட்டால் அசுர சக்திகள் பெருகி விடுமே என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் சூரிய பகவானின் செயல் அமைந்ததால் அந்த சாபத்தில் ஒரு பங்கை காச்யப்ப மகரிஷி எடுத்துக் கொண்டதுடன் மிஞ்சிய சாபத்தின் விளைவிலிருந்து மீள எங்கு மூன்று ஆல மரங்கள் பிறை வடிவில் அமைந்துள்ளனவோ அந்த தலத்தில் பிறைக்குள் பிறை வழிபாட்டை நிகழ்த்தி அதே தலத்தில் மூன்றாம் பிறை தரிசனத்தையும் பெற்று வந்தால் சூரிய பகவான் பெற்ற சாபம் தீரும் என்று நல்வழி காட்டினார் காச்யப மகரிஷி.
பிரம்மாவை எவரும் நிந்திக்கக் கூடாது. அவ்வாறு தெரியாமல் நிந்தித்து விட்டால் அதற்கு பெருமாள்தான் பிராயசித்தம் அளிக்க முடியும். அதே போல எக்காலத்தும் பெருமாளை மறந்தும் நிந்தித்தல் ஆகாது. விதியின் வலியால் அப்படி ஒரு தவற்றை செய்து விட்டால் அதற்கு பிராயசித்தம் ஈசனே அளிக்க முடியும். அதனால்தான் ஈசனின் தட்சிணா மூர்த்தி தத்துவமான மூன்று ஆல மரங்கள் எம்பெருமானின் சிரசில் பிரகாசிக்கும் பிறை வடிவமாக மிளிரும் சிவத் தலத்தில் தன்னுடைய மைந்தனை பிராயசித்தத்திற்காக அனுப்பினார் காச்யப மகரிஷி.



சூரிய தீர்த்தம், பரிதிநியமம்
தன்னுடைய தந்தையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி சூரிய பகவான் பூலோகம் எங்கும் உள்ள சிவத் தலங்களை
வலம் வந்து வணங்கும்போது மூன்று ஆல மரங்கள் பிறை வடிவில் திகழும் பரிதிநியமம் திருத்தலத்தை அடைந்தார். அந்த மூன்று ஆலமரங்களில் நடுவில் உள்ள ஆலமரத்தில் ஒரு பெரிய ரிஷி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரை வணங்கி நின்றார். கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்த அந்த முனிவர் தன்னுடைய ஞான திருஷ்டியால் சூரிய பகவான் தன்னை வணங்குவதை அறிந்து கண் திறந்து அவரை வரவேற்றார். சூரிய பகவான் தான் பெற்ற சாபம் குறித்தும் அதை நிவர்த்தி செய்ய தன்னுடைய தந்தை அளித்த வழிபாடுகள் குறித்தும் தெரிவித்தார். காச்யபர் என்ற பெயரைக் கேட்டதுமே அந்த முனிவர் எழுந்து நின்று இரு கைகளையும் தலை மேல் கூப்பிக் கொண்டு கிழக்கு நோக்கி சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணக்கம் தெரிவித்தார். சூரிய பகவான் ஒரு கணம் திகைத்து விட்டார். தனக்கு தன் தந்தை மேல் உள்ள அபிமானத்தை விட நாம் யார் என்று அறியாத இந்த முனிவர் தன் தந்தை மேல் என்ன மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறார் என்ற பிரமிப்பில் வாயடைத்து நின்றார்.
பின்னர் அந்த முனிவர் சூரிய பகவானுக்கு பிறைக்குள் பிறை வழிபாட்டைப் பற்றி விளக்கமாகக் கூறினார். காலையில் ஆமூர் திருத்தலத்தையும் நண்பகலில் தின்னகோணம் திருத்தலத்தையும் மாலையில் பரிதிநியமம் திருத்தலத்தையும் தினமும் வழிபடுவதே சூரிய பகவானுக்குரித்தான பிறைக்குள் பிறை வழிபாடாகும் என்று அருளினார். அந்த மகரிஷியே ஓமாமாம் சித்தர் என்பதை அறிந்து அளவிலா ஆனந்தம் அடைந்தார் சூரிய பகவான்.



நாகலிங்க மலர், பரிதிநியமம்
ஓமாமாம் சித்தர் அருளியபடி வழிபாடுகளை மேற்கொண்டு மூன்றாம் பிறை தரிசனத்தையும்
பெற்று வந்தார் சூரிய பகவான். பல்லாண்டுகள் அயராது இயற்றிய வழிபாட்டால் அவருடைய சாபம் முழுவதுமாக தீர்ந்து தன்னுடைய பூர்வ சக்திகள் அனைத்தையும் பெற்று ஜகத் ஜோதியாய் பிரகாசித்தார் சூரிய பகவான். சூரிய பகவான் பரிதிநியமம் திருத்தலத்தில் ஸ்ரீபரிதியப்பரை தரிசனம் செய்யும் கோலத்தை இன்றும் மக்கள் வணங்கி பலன் பெறலாம். பரிதிநியமம் ஆலயம் எதிரில் பிறை வடிவில் உள்ள மூன்று ஆலமரங்களை வலம் வந்து வணங்குதலால் எத்தகைய கண் நோய்களும் நிவர்த்தி அடையும். தந்தை வழியில் ஏற்பட்ட சாபங்களும் பிணக்குகளும் தீரும். சொத்துத் தகராறுகள் சீர் பெறும். பரிதிநியமம் திருத்தலத்தில்தான் எம்பெருமான் சூரிய பகவானுக்கு பரிதி கோணம், பருத்தி நியமம் என்ற இருவிதமான சக்திகளை அளித்து ஆசீர்வதித்தார்.
பரிதி கோணம் என்பது கன்னி கோணம், தின்னகோணம் என்பதைப் போல சூரிய பகவான் மாலை நேரத்தில் அருளும் சூரிய சக்தி. பருத்தி நியமம் என்பது சூரிய பகவானுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட கிரண நியதிகள். இந்த கோண சக்திகள், கிரண நியதிகள் சித்தர்களின் நாடிகளில் ஏராளமாக உள்ளன. அவற்றில் அணு அளவை இங்கு அளிக்கிறோம். சூரியன் மாலையில் பூமியிலிருந்து மீளும்போது எந்தெந்த இறை மூர்த்திகள், மூலிகை விருட்சங்கள், தீர்த்தங்கள் மேல் தன் கிரணத்தை பரப்ப வேண்டும் என்ற விவரங்கள் கோண சக்திகளாக அருளப்பட்டுள்ளன. எந்தெந்த விகிதாசாரத்தில் இந்த சக்திகள் அமைய வேண்டும் என்ற இரகசியம் கிரண நியதிகளைப் பற்றிய கிரந்தங்களில் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன.



பிறைவடிவ ஆலமரங்கள், பரிதிநியமம்
உதாரணமாக மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன் அனைத்து சுயம்பு லிங்கத் தலங்களிலும், நாகலிங்க மரங்கள் உள்ள தலங்களிலும் குறிப்பாக பரிதிநியமம் தலத்திலும், சூரிய பூஜை நிகழும் தலங்களிலும், மூலவர் கிழக்கு பார்த்த தலங்களிலும் சூரிய பகவான் தன்னுடைய பரிதி கோண சக்திகளை கட்டாயம் பொழிய வேண்டும். இந்த இரகசியங்கள் கோண சக்தி இரகசியங்கள் ஆகும். இத்தகைய கோண சக்திகளைப் பெற்றுள்ளதால் பரிதிநியமம் தலத்தில் நாம் மேலே காணும் நாகலிங்க பூ சஹஸ்ர லிங்க சக்திகளுடன் பூரிக்கின்றது.
ஒருவர் தன்னுடைய வீட்டில் அமர்ந்திருக்கும்போது அவர் மேல் பொழியும் சக்திகள், அவர் ஒரு சிவத்தலத்தில் அமர்ந்திருக்கும்போது அவர் மேல் பொழியும் சக்திகள், ஒரு முள் மரத்தைப் பார்த்திருக்கும்போது அவர் மேல் பொழியும் சக்திகள், அவர் ஒரு கொன்றை மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் மேல் பொழியும் சக்திகள் இவை அனைத்தும் வேறு வேறான சூரிய சக்திகளே !
இந்த இரகசியங்கள் எல்லாம் பருத்தி நியம கிரந்தங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அதே போல வேறெங்கும் இல்லாத அதிசயமாக பரிதிநியம தலத்தில் நாம் பெறும் மூன்றாம் பிறை தரிசனமானது பிறை வடிவுடன் கூடிய கோளமாக இருக்கும் என்பதும் உண்மையே. இந்த அற்புதத்தை இன்றும் நீங்கள் கண்டு ஆனந்தம் பெறலாம்.



ஸ்ரீபரிதியப்பரை வழிபடும் சூரிய பகவான்
சூரிய பகவான் பெற்ற சாபத்தின் ஒரு பங்கை காச்யப்ப முனிவர் ஏற்றுக் கொண்டார் அல்லவா ? அதனால் அவர் தான் ஞாயிற்றுக் கிழமைகளில் சாதித்த பூஜா பலன்களை எல்லாம் ஒன்று திரட்டி சூரிய சக்திகளை ஏற்கும் ஓர் அற்புத தாவரமாக உருவாக்கினார். அதுவே பருத்திச் செடி ஆகும். இவ்வாறு காச்யப முனிவரின் அருந்தவ சூரிய சக்திகளால் உருவானதால் பருத்திச் செடி சூரிய சக்திகளை ஈர்க்கும் தெய்வீக ஆற்றலுடன் பூரிக்கிறது. இதன் பின்னால் அமைந்த தெய்வீக சக்திகள் வியப்புடையதாக இருக்கும். தூக்கணாங் குருவிகளைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். வானில் பறந்தபடியே தங்கள் கூடுகளைக் கட்டும் அற்புத பறவைகள் என்பது பலரும் அறிந்த விந்தை. ஆனால், இதற்கு மேலும் பல விந்தைகளைப்பற்றி சித்தர்களே வர்ணிக்கின்றனர். தூக்கணாங் குருவிகள் கர்ண குசம் என்ற ஒரு வகை புற்களாலேயே தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. இந்த புற்களுக்கு சூரிய சக்திகளை கிரகிக்கும் தன்மை அதிகம். மேலும் இந்த பறவைகள் கிழக்கு திசை நோக்கி பறந்தவாறே தங்கள் கூடுகளைப் பின்னுகின்றன என்பது விந்தையிலும் விந்தையாகும். கீழ்க் கண்ட வீடியோ இந்த அற்புதத்தை சித்தரிக்கின்றது.



எதற்காக தூக்கணாங் குருவிகள் கிழக்கு நோக்கி முதல் முடிச்சுகளை அமைக்கின்றன.
கிழக்கு திசையே எல்லா காரியங்களும் நல்லபடியாக முடிவதற்காக இறை சக்திகளுடன் துலங்கும் திசையாகும். எக்காரியத்தையும் குறிப்பாக முடி போடுதல், கையெழுத்திடுதல் போன்ற காரியங்களை கிழக்கு நோக்கி நிறைவேற்றுதலால் காரியத் தடங்கல்கள் நிவர்த்தி ஆவதுடன் அக்காரியங்கள் நீண்ட காலத்திற்கு உறுதியாக நிலைத்து நிற்கும். பல தூக்கணாங் குருவிகள் தங்கள் வாயில்களையும் கிழக்கு நோக்கி அமைத்துக் கொள்கின்றன. இதனால் வேத சக்திகளை அவை எளிதில் கிரகிக்க முடியும். யாக்யவல்கிய மகரிஷி வேதங்களை கற்பதற்காக சூரிய பகவானுடன் பறந்தவாறேதான் வேதங்களை கிரகித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அந்தரத்தில் பறந்தவாறே தூக்கணாங் குருவிகள் தங்கள் கூடுகளைக் கட்டுவதால் அதில் வேத சக்திகள் நிறைந்திருக்கும் என்பதை தற்போது நீங்களே ஊகித்திருப்பீர்கள் அல்லவா ? அதானால்தான் தூக்கணாங் குருவி கூடுகள் சிறந்த வாஸ்து சகுனமாக அமைவதுடன் வேத சக்திகளின் பெட்டகமாகவும் திகழ்கின்றது.



கர்ணகுசம் புல்லில் திகழும் கூடு
தூக்கணாங் குருவி கூடுகளின் மற்றோர் சிறப்பம்சம் என்னவென்றால் எப்படி காதில் அணியும்
தங்கக் கடுக்கன்கள் வேத சக்திகளையும் நல்ல ஒலிகளையும் மட்டுமே கிரகித்து காதினுள் அனுப்புகின்றதோ அதுபோல கர்ண குசம் புற்களாலான தூக்கணாங் குருவி கூடுகள் வேத சக்திகளை மட்டுமே கிரகிக்கும் நற்சக்திகளை உடையவை. ஒரு குருவி இதனுள் வசித்து விட்டு வேறு எங்காவது சென்று விட்டாலும் அந்த கூடு வானில் மிதக்கும் செயற்கை கோள்கள் போல தொடர்ந்து சூரிய சக்திகளையும் வேத சக்திகளையும் ஈர்த்து சமுதாயத்திற்கு பயன்தரும் சூரிய கலசங்களாக செயல்படுகின்றன. எனவே எவரும் இத்தகைய தூக்கணாங் குருவி கூடுகளை மரத்திலிருந்து அகற்றவோ அவைகளை பிரிப்பதோ கூடாது. முடிந்தால் அந்த கூடுகளின் கீழே அவற்றின் நேராக நின்று கொண்டு வேத மந்திரங்களை, சூரிய துதிகளை ஓதி வந்தால் அற்புத சூரிய சக்திகளை எளிதில் கிரகிக்கலாம். கர்ணன் தன்னுடைய 300 பிறவிகளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றியே அற்புதமான சூரிய சக்திகளை கிரகித்து சூரிய சக்திகள் மிக்க தங்க கவசத்தையும், குண்டலத்தையும் சூரிய பகவானின் பிரசாதமாகப் பெற்றான் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். மேலும் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் உதித்த பரசுராமரை குருவாகப் பெறும் பாக்யத்தையும் பெற்றான் கர்ணன்.
சூரிய பகவானுடன் வானில் பறந்து வாலகில்ய மகரிஷிகளைப் போல் தூக்கணாங் குருவிகள் வேத சக்திகளைக் கிரகிக்கின்றன என்றால் மனிதர்கள் எப்படி இத்தகைய சக்திகளை கிரகிக்க முடியும் என்று சிந்திக்கத்
தோன்றுகிறது அல்லவா ? இதற்கு விடையாக அமைவதே நம் முன்னோர்கள் வகுத்த தக்களி (spindle) மூலம் பஞ்சை நூற்று பூநூல் தயாரிக்கும் முறையாகும். எனவே காச்யப மகரிஷி, சூரிய பகவானின் தவ சக்தியால் விழைந்த பருத்தி பஞ்சை அந்தரத்தில் சுழலும் தக்களியால் நூற்கும்போது விளையும் வேத சூரிய வாஸ்து சக்திகள் எத்தகைய மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சற்றே எண்ணிப் பார்த்தால் நம் மூதாதையர்களின் மேதா விலாசம் நம்மை பிரமிக்க வைக்கும்.



தக்களியால் திரிக்கும் நூலுக்கு மற்றோர் சிறப்பும் உண்டு. பூமிக்கு மூன்று விதமான சுழல் சக்திகள் உண்டு. தன்னைத்தானே சுற்றிக் கொள்வது, சூரியனைச் சுற்றி வருவது, தன்னுடைய அச்சில் சுழல்வது. பூமியின் இந்த மூன்று சுழல் தத்துவங்களையும் ஜோதிட ரீதியாக முறையே லக்ன சுழற்சி, ராசி மண்டல சுழற்சி, அயனாம்ச சுழற்சியாக குறிப்பிடுகிறோம். பூமியின் இந்த மூன்று சுழற்சி மாற்றங்களுமே தக்களியின் சுழற்சியில் அமைவதால் தக்களியில் திரிக்கும் நூல் சூரியனின் சக்திகளை முழுமையாகப் பெற்று காயத்ரீ மந்திரங்களையும் மற்ற வேத மந்திரங்களையும் சிறப்பாக ஈர்க்கும் சாதனமாகத் திகழ்கிறது.



ஸ்ரீசூரிய பகவான் பரிதிநியமம்
பருத்திச் செடி சூரிய சக்திகளை கிரகிக்கும் முதல் தரமான தாவரமாகும். இது எத்தகைய நீண்ட இழைகளாக அமைந்தாலும் அது முழுவதுமே சூரிய மந்திரங்களை ஈர்க்கும் பஞ்ச பூத சக்திகளுடன் மிளிர்வதால் பருத்தி பூநூலை அணிந்து எளிதில் வேத சக்திகளை கிரகித்து உடலில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இறை மூர்த்திகளுக்கு திருக்கோயில்களில் பருத்தி பூநூலை அணிவதால் கிட்டும் பலன்கள் அற்புதமானது. ஆனால் தக்களியால் தயார் செய்த பூநூலே இத்தகைய இறை சக்திகளுடன் பரிணமிக்கும். தக்களிகளை கொய்யாக் கட்டையில் தயார் செய்வது மேலும் சிறப்புடையது.
பூநூல் என்பது நிரந்தர பொருளான இறைவனை அடைய உதவும் ஒரு சாதனமே என்பதால் நித்தியத்துவத்தை அளிக்கும் பூநூலை தயாரித்து அதில் பிரம்ம முடிச்சை போடும்போது கிழக்கு நோக்கி நின்று கீழ்க் கண்ட வேத மந்திரத்தை ஓதுவது சிறப்பாகும்.
அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்டதி ஈஸானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே
அவரவர் கட்டை விரல் அளவில் இதயத்தில் உறையும் ஆத்மாவே உலகெங்கும் பரந்து நிற்கிறது என்பதே இந்த மந்திரத்தின் சாரமாகும். இவ்வாறு ஆத்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமே பூநூல்.
பருத்திச் செடி சூரிய சக்திகளை கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால் அதன் நிறம் வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒவ்வொரு விதமாகப் பொலியும். எனவே பருத்திச் செடியின் நிறத்தை வைத்தே அன்றைய தினத்தின் கிழமையைச் சொல்லும் விவசாயிகள் இன்றும் உண்டு. இவ்வாறு பரிதி கோண சக்திகளும் பருத்தி நியம சக்திகளும் ஒருங்கிணையும் திருத்தலமே பரிதிநியமமாகும்.
கொய்யாப் பழத்திற்கு சில விசேஷ சக்திகள் உண்டு. எவரும் கொய்யாத பழமே கொய்யா. அதாவது கொய்யா பழத்தை கைகளாலோ கொம்பு கொண்டோ பறிக்கக் கூடாது. அவ்வாறு கொம்பு கொண்டு பறிக்காமல் தானே தரையில் விழும்போது, அந்தரத்தில் மிதந்து தரையில் விழும் கனி வாஸ்து அந்தர பூமி சுந்தர சக்திகளை கிரகிக்கிறது. இந்த வேத சக்திகளை உலகில் வேறு எம்முறையிலும் பெறவே முடியாது. அவ்வாறு தானாக விழுந்த ஒரே ஒரு கொய்யா பழத்தை உண்டால் போதும் ஒரு வாரத்திற்கு ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து ஜீவ சக்திகளும் கிட்டி விடும்.



ஸ்ரீபரிதியப்பர், பரிதிநியமம்
தானாக கீழே விழுந்த கொய்யா பழங்களை, ப்ரெட் வெண்ணையுடன் கொய்யாப் பழ ஜாம் சேர்த்து இறைவனுக்கு நிவேதனம் செய்து குறிப்பாக ஆஞ்சநேயருக்குப் படைத்து தானம் அளித்தலால் நற்புத்தியும் கல்வியும் பெருகும். வாராக் கடன்கள் வசூலாகும். சூரியனையே பழம் என்று நினைத்துப் பறந்து சென்று அதைப் பறிக்க முயன்றவர்தானே ஆஞ்சநேய மூர்த்தி.



ஸ்ரீசஞ்சீவராய ஆஞ்சநேயர் திருத்தலம் பாடலூர்
வாகன விபத்துக்களை களையும் அற்புத திருத்தலம்
கொய்யாப் பழத்திற்கும் ஓமாமாம் சித்தருக்கும் உள்ள தொடர்பு தெய்வீகமானது.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்பது அமைதியான மரணம் அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் ஜபிக்க வேண்டிய மந்திரம். நன்றாக கனிந்த வெள்ளரிப் பழம் கொடியிலிருந்து இயல்பாக விடுபடுவதைப் போல உடலிலிருந்து உயிர் அமைதியாக எவ்வித துன்பமும் இன்றி பிரிய முக்கண் ஈசனைப் பிரார்த்திப்போமாக, என்று அமைவதே ம்ருத்யுஞ்ஜய மந்திரமாகும். எனவே காய் நன்றாக கனிந்தால்தானே அது கொடியிலிருந்து இயல்பாக விடுபடும். அதுபோல கொய்யாப் பழம் நன்றாக முதிர்ந்து கனிந்துவிட்டது என்பதற்கு அடையாளம் அது தானாக மரத்திலிருந்து விழுவதுதானே. அதனால் கொய்யாப் பழத்திற்கு மிருத்யுஞ்சய கனி என்ற பெயரும் உண்டு.


ஸ்ரீஅம்ருதமிருத்யுஞ்ஜய மூர்த்தி


இது எப்படி ஓமாமாம் சித்தருடன் தொடர்புடையது ஆகிறது ?

ஓம் ஆம் ஆம் என்பதே ஓமாமாம் சித்தரின் நாம விளக்கம். இதில் ஓம் என்பது முக்கண் சக்தியையும், ஆம் என்பது இறைவனின் வலது நேத்ர சாதக சக்திகளையும், அடுத்த ஆம் என்பது இறைவனின் இடது நேத்ர ஸ்ரீ சக்திகளையும் குறிக்கும். இதுவே ஓமாமாம் சித்தரின் தெய்வீக நாம சக்தி. இந்த மூன்று சக்திகளைப் பெற்றிருப்பதால் அவர் ம்ருத்யுஞ்சய கனியான கொய்யாவுடன் தொடர்புடையவர் ஆகிறார். இதிலிருந்து வருவதே தூக்கணாங் குருவியின் நாம மகிமையும். தூக்கண் என்றால் அந்தர வாஸ்து சக்தி. ஆம் என்றால் சூரிய சாதக சக்திகள். எனவே தூக்கணாங் குருவி என்றால் அந்தர வாஸ்து சக்திகளையும், சூரிய சக்திகளையும், சாதக சக்திகளையும் அளிக்கக் கூடியது என்பது பொருளாகிறது அல்லவா ?



பரிதிநியமம்
கொய்யாப் பழத்திற்கு பகுசீவனம் என்ற மற்றோர் அதிசய அனுகிரக சக்தியும் உண்டு.
உதாரணமாக ஒரு கொய்யாப் பழத்தில் ஐந்து கிராம் புண்ணிய சக்தி இருப்பதாக வைத்துக் கொண்டால் அதை ஒருவர் உண்ணும்போது அவருக்கு ஐந்து கிராம் புண்ணிய சக்தி கிட்டும். அந்த கொய்யாப் பழத்தை இரு துண்டுகளாக்கி இருவருக்கு அளித்தால் அந்த இருவருக்கும் தலைக்கு ஐந்து கிராம் புண்ணிய சக்தி பெருகும். அதே கொய்யாப் பழத்தை நான்கு துண்டுகளாக்கி நால்வருக்கு அளித்தால் அந்த பண்ணிய சக்தி நான்கு மடங்காய்ப் பெருகும். இது கொய்யாப் பழத்திற்கு மட்டுமே இறைவனால் அளிக்கப்பட்ட பகுசீவனம் என்ற புண்ணிய சக்தியின் மகிமை. இத்தகைய பகுசீவன புண்ணிய சக்தியை அளிக்கக் கூடியவரே ஓமாமாம் சித்த பிரான் ஆவார். அவரிடம் 100 மி.லி. பாலை அளித்தால் அவர் அந்தப் பாலை எத்தனைப் பேருக்கு பகிர்ந்தளித்தாலும் ஒவ்வொருவருக்கும் 100 மிலி பால் அருந்திய பலன் கிட்டும். எனவே கொய்யாப் பழம், தூக்கணாங் குருவி, ஓமாமாம் சித்தர் என இறைவன் அளித்த மூன்று பொக்கிஷங்களை உணர்ந்து கொள்ளவே ஒரு மனிதனின் ஆயுட்காலம் போதாது என்றால் எம்பெருமானின் மற்ற பொக்கிஷங்களை என்றுதான் புரிந்து கொள்வது ?



சந்திர தீர்த்தம், பரிதிநியமம்
அமாவாசை, பிரதமை என ஒவ்வொரு திதி அன்றும் அளிக்கப்படும் தர்ப்பணத்தின் பலன்கள்
மாறுபடுவதைப் போல ஒரே விதமான தர்ப்பணத்தை வெவ்வேறு திருத்தலங்களில் அளிக்கும்போது அதன் பலன்கள் மாறுபடுகின்றன அல்லது சிறப்படைகின்றன என்பது உண்மையே. ஆமூர் ஸ்ரீரவீஸ்வரர் திருத்தலத்தின் தீர்த்தம் அத்தலத்தின் தெற்கு திசையில் பாயும் காவிரி ஆறு. தெற்கு திசை மூதாதையர்களுக்கு உரியதால் இந்த தெற்கு திசையை நோக்கி அருளும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் தியானத்தில் அமர்ந்து பன்னெடுங் காலம் தவம் இயற்றினார் காலவ மகரிஷி. எதற்கு ? மக்களுக்கு சிறந்த திருமண வாழ்வையும் ஒழுக்கமான சந்தான பாக்கியத்தையும் பெற்றுத் தருவதற்காக. வேறெங்கும் காண இயலாத காலவ மகரிஷியின் தியானக் கோலம். இவ்வாறு காலவ மகரிஷி தினமும் பெறும் தியான சக்திகளே லட்சுமி கடாட்ச சக்திகளாக உருவெடுக்க அந்த திருமகளின் திருஉருவங்களை திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் தினமும் மணந்து கொள்கிறார் என்பது இதுவரை நீங்கள் அறியாத தெய்வீக இரகசியமாகும். எனவே இத்தலத்தில் அல்லது அருகில் உள்ள காவிரி ஆற்றங் கரையில் காலவ தர்ப்பணம் அளித்தலால் கிட்டும் பலன்கள் அபாரம்.
ஒரு நீண்ட வாழை இலைமேல் ஒரு படிக்குக் குறையாமல் அவித்த கோதுமையைப் பரப்பி அதன் மேல் தர்ப்பை சட்டம் அமைத்து தர்ப்பணம் அளித்தலே காலவ தர்ப்பணம் ஆகும். தர்ப்பணத்திற்கு முன் காவிரியில் நீராடுதல் அவசியம். தலையில் மட்டும் தீர்த்தத்தைத் தெளித்துக் கொள்ளுதல் போதாது.



ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் ஆமூர்
தர்ப்பணத்திற்குப் பின் வாழை இலையுடன் கோதுமையை பசுவிற்கு அளித்தல் சிறப்பாகும். கோதுமையை திருக்குள மீன்களுக்கு அளிப்பதும் ஏற்புடையதே. பொதுவாக பகல் இரவு என்ற பாகுபாடு இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் தர்ப்பண வழிபாடுகள் நிறைவேற்றலாம் என்றாலும் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யும் தர்ப்பண வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு என்பது உண்மையே. ஆனால், இதற்கு விலக்காக அமைவதே ஆமூர், தின்னகோணம், பரிதிநியமம் திருத்தலங்களில் நிறைவேற்றும் தர்ப்பண வழிபாடுகள். இத்தலங்களில் சூரிய பகவான் பிரத்யேகமான கோண சக்திகளுடன் பொலிவதால் சூரிய கிரணங்கள் தர்ப்பண நீரில் பட்டு தர்ப்பை சட்டங்கள் மேல் பொழியும்போது அற்புத பலன்கள் வர்ஷிக்கின்றன. எனவே சூரிய கிரணங்கள் தர்ப்பை சட்டத்தின் மேல் விழும்படி தர்ப்பை சட்டத்தை மேற்கூறிய தலங்களில் அமைத்துக் கொள்தலே சிறப்பாகும்.



ஸ்ரீமுருகப்பெருமான் ஆமூர் திருத்தலம்
மிகவும் அபூர்வமாக பரிதிநியமம் திருத்தலத்தில் ஆலயத்தின் கிழக்கு திசையில் சூரிய தீர்த்தமும், ஆலயத்தின் மேற்கு திசையில் சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. இந்த தீர்த்தங்களின் தரிசனமே பல பிறவிகளுக்குத் தேவையான சூரிய சந்திர சக்திகளை அளிக்கக் கூடியதாகும். இந்த தீர்த்தங்களில் வேகவைத்த கோதுமை அல்லது கொள் தான்யத்தின் மேல் தர்ப்பணம் அளித்தல் சிறப்பாகும். கொள் தான்யத்தை குதிரைகளுக்கு உணவாக அளித்தல் விசேஷமானது. ராகு கேதுவின் சாபத்திலிருந்து சூரிய பகவான் இங்கு விமோசனம் பெற்றதால் நாக தோஷங்களால் வருந்தும் பெண்களும் ஆண்களும் இத்தகைய தர்ப்பண வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். இறைவனுக்கு நாகலிங்க மலர்களால் இத்தலத்தில் அர்ச்சனை செய்வதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால், ஒரு நாகலிங்க மலருக்கு ஆறு பொட்டலம் என்ற கணக்கில் அர்ச்சனைக்கு முன்னரோ பின்னரோ தானம் அளித்தால்தான் வழிபாட்டின் பலன் பூரணம் பெறும் என்பதை நினைவில் கொள்ளவும்.



பட்டாம்பட்டு கோலத்தில் கணபதி மூர்த்தி
இறைமூர்த்திகளுக்கு படத்தில் காட்டியபடி சுத்தமான பருத்தியாலான துண்டு அணிவித்தலே
பட்டாம்பட்டு கோலமாகும். கைத்தறி ஆடைகள் மேலும் சிறப்புடையவை. பட்டு ஆம் பட்டு என்பதே பட்டாம்பட்டு.
ஓமாமாம் சித்தர் காலத்தில் தோன்றியதே இந்த பட்டாம்பட்டு வழிபாடாகும். ஓமாமாம் சித்தர் தன் இரு தோள்களிலும் தூக்கணாங் கூடுகளை சுமந்தவாறே எல்லாத் திருத்தலங்களுக்கும் யாத்திரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் செல்லும் வழியெங்கும் வாஸ்து அந்தர சக்திகளையும், சூரிய சக்திகளையும், சாதக சக்திகளையும் நிரவி அற்புத சேவைகளை நிறைவேற்றினார். ஆனால் சாதாரண மனிதர்கள் தூக்கணாங் குருவி கூடுகளை தரிசனம் செய்வது மட்டுமே ஏற்புடையது அவர்கள் எந்தக் கூட்டையும் தொடக் கூடாது என்பதால் சாதாரண மக்களும் இத்தகைய முக்கூட்டு சக்திகளைப் பெற ஓமாமாம் சித்தரால் அளிக்கப்பட்டதே பட்டாம்பட்டு வழிபாடு.



பட்டாம்பட்டில் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் காச்யப மகரிஷியும்
இவ்வழிபாட்டில் சுத்தமான பருத்தி வஸ்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேற்கூறிய தலங்களில் தர்ப்பணம் அளிக்கும்போது அங்கு சாட்சி பூதமாக மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து அவருக்கு பட்டாம்பட்டு வஸ்திரத்தை அணிவித்து தர்ப்பணத்திற்கு பின் தானமாக அளிப்பதும் அற்புத பலன்களை வர்ஷிக்கும். இதனால் ஆடைப் பஞ்சம் எக்காலத்தும் ஏற்படாது. தோல் வியாதிகள் நிவாரணம் பெறும். தக்களியால் தயாரித்த பூநூலை இறை மூர்த்திகளுக்கு அளிக்க பட்டாம்பட்டின் வழிபாடு பன்மடங்காய்ப் பெருகும். இவ்வாறு அளிக்கும் தர்ப்பணங்களின்போது பெறும் பட்டாம்பூச்சிகளின் தரிசனம் விசேஷமானது. இத்தகைய வஸ்திரங்களின் மேலோ இறை மூர்த்திகளின் மேல் உள்ள வஸ்திரங்களின் மேலோ பட்டாம்பூச்சிகள் அமர்ந்தால் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறும் நற்சகுனமாக இவை அமையும். பட்டு ஆம் பூச்சிதானே பட்டாம்பூச்சி.
தர்ப்பணத்திற்குப் பின்
ஜபாகுசும சங்காசம் காச்யபேயம் மகத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூர்ய துதியை ஓதி கிழக்கு நோக்கி 12 முறை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தலால் சூரிய பகவானின் அனுகிரகத்தை எளிதில் பெறலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்யம், தானம் சிறப்புடையது.




பிடாரி பனையும் பிடாரி தேவியும், பரிதிநியமம்
முனீஸ்வரர், கருப்பண்ண சுவாமியைப் போல பெண் காவல் தெய்வங்களும் பலர் உண்டு.
ஒரு முறை பிடாரி என்ற காவல் தேவி அதிக வேகம் பூண்டு அக்னி சக்திகளுடன் பல லோகங்களையும்
வலம் வர ஆரம்பித்தாள். அடங்கா அக்னி சக்தியுடன் விளங்கிய அத்தேவியின் அதீத உஷ்ண சக்தியைத்
தாங்க முடியாமல் பல லோகங்களும் தவித்தன. அதைக் கண்ட ஆங்கீரச மகரிஷி பிடாரி தேவியின் உக்ரகத்தை தணித்து அத்தேவியை சூரிய பகவானுக்கு மணம் முடித்து வைத்தார். இந்த தெய்வீக வைபவம் நிகழ்ந்த திருத்தலமே பரிதிநியமம் ஆகும். அக்னி சக்திகள் மிகுந்த பிடாரி தேவியாய் பல லோகங்களில் வலம் வந்த தேவி இங்கு பிடாரி பனை மரமாகவும் சூரிய பகவானை மணந்து சாந்தம் அடைந்த தேவி இங்கு பிடாரி அம்மனாகவும் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள். பொதுவாக தலைவிரி கோலமாக, பிறருக்கு அடங்காமல் இருக்கும் பெண்களை பிடாரி என்று அழைப்பதுண்டு. இவ்வாறு முரட்டுத் தனம் நிறைந்த பெண்கள் இத்தலத்தில் விளங்கும் பிடாரி பனையை வலம் வந்து வணங்கி பிடாரி அம்மனை வழிபடுதலால் தங்கள் முரட்டுத் தனம் மறைந்து சாந்தமான இயல்பைப் பெறுவார்கள். கணவன்மார்களோ அல்லது பெற்றோர்களோ இத்தகைய வழிபாடுகளை அத்தகைய முரட்டுக் குணமுள்ள பெண்களின் சார்பாகவும் நிறைவேற்றி பலன் பெறலாம்.



பரிதிநியமம்
உயர் பதவி வகிக்கும் பெண்களின் முரட்டுத் தனத்தால் பாதிக்கப்படும் ஆண்களும் இந்த பிடாரி அம்மனை
வணங்கி சுத்தமான மஞ்சள், குங்குமத்தால் பிடாரி பனையை அலங்கரித்து 21 முறை வலம் வந்து வணங்குவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம். தலைவிரி கோலமாக இருக்கும் பெண்களின் மணவாழ்க்கை திருப்தி இல்லாமல் போவதுடன் வறுமையில் வாடி சந்தான பாக்கியங்கள் அமையாலும் அல்லல் அடைய வேண்டி வரும். இத்தகைய பாதிப்புகளால் வாடும் பெண்கள் தங்கள் தவறை உணர்ந்து பிடாரி பனையை வணங்கி அநாதை குழந்தைகளுக்கு மருதாணி தைலம் அளித்து வருதலால் குடும்பத்தில் வறுமை நிலை மாறி வளம் பெருகும்.



ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி ஆமூர்
மிக அரிதான உச்சிஷ்ட கணபதி மூர்த்தி எழுந்தருளிய திருத்தலமே ஆமுர் ஆகும்.
பொதுவாக உச்சிஷ்ட கணபதி மூர்த்தி தனது இடது தொடையில் சக்தியை எழுந்தருளச் செய்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்களின் இடது தொடை என்பது தர்ம பத்தினிக்குரிய இடமாகும். துரியோதனன் துரோபதையை தனது இடது தொடையில் அமரச் சொன்னதால் அந்த தொடையில் பீமனுடைய கதாயுதம் தாக்க அவன் உயிர் துறந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், எதிரகாலத்தில் தன்னுடைய மைந்தன் மகாபாரத யுத்தத்தில் பீமனால் கொல்லப்படுவான் என்பதை அறிந்த காந்தாரி துரியோதனனை ஆமூர் திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி மூர்த்தியை வணங்கி தான் துரோபதைக்கு இழைத்த கொடுமைக்கு பரிகாரம் பெற்று வருமாறு அனுப்பினாள். ஆனால், விதி வலியது அல்லவா ?



ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி சத்திமுற்றம்

சகுனியுடன் இத்தலத்திற்கு வந்த துரியோதனன் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியை தரிசனம் செய்தாலும் அவர் சகுனியின் கூற்றுப்படி சக்தி சமேதராகவோ ஆறு கரங்களுடனோ எழுந்தருளாத காரணத்தால் தனக்கு யுத்தத்தில் உதவ பெரிய போர்ப்படை வேண்டும் என்ற பிரார்த்தனையை மட்டுமே பிள்ளையாரிடம் வைத்து அதன்படி கிருஷ்ண பரமாத்மாவின் பரந்த படையை பெற்றான். தாயின் பெருமையை மறந்ததால் அயலான் மனைவியை தாயினும் மேலாக மதிக்க மறந்ததால் சகுனியின் வார்த்தைகளில் மயங்கி தான் வந்த காரியத்தை சரியாக முடிக்காமல் சென்று விட்டான் துரியோதனன். விளைவு நாம் அறிந்ததே.



ஆமூர் திருத்தலம்
உச்சிஷ்ட என்றால் எஞ்சியது அல்லது மிஞ்சியது என்று பொருள். உச்சிஷ்ட அன்னம் என்றால்
நாம் உண்டது போக மீந்துள்ளது. ஒருவருடைய தகுதிக்கு மிஞ்சிய போகமும் உச்சிஷ்ட போகமே. உதாரணமாக ஒருவருடைய பசிக்கு நான்கு இட்லிகள் போதுமென்றால் அடுத்த வேளைக்கும் சேர்த்து அவர் எட்டு இட்லி சாப்பிட்டால் அதுவும் உச்சிஷ்ட போகமே. அதே போல தனக்கு சொந்தமில்லாத பிறர் உடமைகளை அனுபவிப்பதும் உச்சிஷ்ட போகமே. இத்தகைய அனைத்து உச்சிஷ்ட போக தவறுகளுக்கும் பிராயசித்தம் அளிக்கும் மூர்த்தியே உச்சிஷ்ட கணபதி மூர்த்தி ஆவார். ஆனால், எல்லா தவறுகளையும் செய்து விட்டு உச்சிஷ்ட கணபதி பார்த்துக் கொள்வார் என்ற அலட்சியத்தில் உள்ளவர்களுக்கு இவருடைய மகிமை மறைவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் சித்தர்கள் இவரின் மகிமையை உண்மையிலேயே உணர வேண்டியவர்களுக்கு மட்டும் உதவும் வகையில் அவ்வப்போது தெரியப்படுத்தி வருகிறார்கள். இதுவும் சித்தர்களின் அருட் பணிகளில் ஒன்று. கணவன் மனைவியரிடையே ஏற்படும் எத்தகைய மன வேற்றுமைகளையும் களைந்து குடும்பத்தில் அமைதி நிலவச் செய்வதே உச்சிஷ்ட கணபதி மூர்த்தியின் வழிபாடாகும். கோதுமையால் செய்த இடியாப்பம் குறைந்தது 108 இவருக்கு நிவேதனம் செய்து தானம் அளித்தலால் அற்புத பலன்களைப் பெறலாம்.



பிரகாரமும் பரிமாணமும். ஆமூர் சிவத்தலம்
ஆமூர் திருத்தலத்தில் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி உயர்ந்த பீடத்தில் எழுந்தருளி உள்ளார். இது சக்தி பீடமாகும்.
இதன் பொருள் என்ன ? இறை மூர்த்திகள் உலகெங்கும் சமதளமான இடங்களிலும் மலை உச்சிகளிலும் எழுந்தருளி உள்ளனர். இத்தலங்கள் பல பரிமாண வளர்ச்சி தத்துவங்கள், பரிணாமங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளன. உதாரணமாக ஸ்ரீரங்கம் போன்ற திருத்தலங்களில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்திருக்கும். இது இரு பரிமாண அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியது. வீட்டைக் கட்டும்போது அதன் பூஜை அறை, படுக்கை அறைகள், சமையல் அறை என்ன நீள அகல அளவுகளில் இருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இந்த நியதியின்படி வீடுகளை கட்டுவது என்பது அனைவருக்கும் சாத்தியமாவது கிடையாது. அத்தகைய சூழ்நிலைகளில் அவர்கள் திருக்கோயில்களில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபங்களில் குறைந்தது ஒரு மணி நேரமாவது உலவி, அமர்ந்து, முடிந்த இறைத் துதிகளை ஓதி வந்தால் சரியான வாஸ்துநியதிகள் அமைந்த வீட்டில் வசித்த பலனை அவர்களை எளிதில் பெற்று விடலாம். அது போல தரையில் இருந்து ஒவ்வொரு அடி உயரத்திலும் வீசும் காற்றிற்கு ஒரு சுகாதார சக்தி உண்டு. ஒவ்வொரு கோணத்தில் பிரகாசிக்கும் சூரிய ஒளியின் ஜீவசக்திகள் மாறுபடும். நாம் மலைத் தலங்களை தரிசிக்கும்போது வெவ்வேறு பரிமாண ஆரோக்ய சக்திகள் கிட்டுகின்றன. எனவே ஸ்ரீஎந்திரம் என்பது ஒரு பரிமாணம், மேரு என்பது ஒரு பரிமாணம்.
பிரகாரங்களில் விளையும் பரிமாண சக்திகளையே சிலாபீடங்கள் இறை மூர்த்திகளின் சக்திகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டால்தான் எப்படி ஆமூர் சிவத்தல உச்சிஷ்ட கணபதியின் சக்தி பீடம் உச்சிஷ்ட பரிமாண சக்திகளை அளிக்கின்றது என்பதை உணர முடியும்.



ஸ்ரீவெள்ளியங்கிரி ஈசனை அர்ச்சிக்கும் செங்கதிரோன்
கதிர்களை செந்நிற மலர்களாக ஈசனுக்கு அர்ச்சிப்பது ஆதவனின் அன்பு காணிக்கையா
இல்லை ஈசனின் கருணை கடாட்சமா ?
அறிந்தவர் யாரோ ?
பொதுவாக காலையில் சூரியன் உதிக்கும்போது சூரிய ஒளியில் ரஜோகுண சக்திகள் மிகுந்திருப்பதால் காலை நேர வெயிலில் உலவுவதைத் தவிர்த்து சூரிய பூஜைகளை மேற்கொள்ளும்படி பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். மாசில் வீணையும் மாலை மதியமுமே ஈசன் பெருமையை உணர்த்துவதாகத்தானே அப்பர் பெருமானும் தெளிவுபடுத்துகிறார். ஆனால், இதே ரஜோ குண சக்திகளை சூரிய பகவான் செந்நிற மலர்களாக ஸ்ரீவெள்ளியங்கிரி ஈசனுக்கு அர்ச்சனை செய்வதை மானிடக் கண்களும் கண்டு களிக்கும்படி அருள்வது சூரிய நாராயண பெருமாளின் கருணை கடாட்சமே.
ரஜோ குண சக்திகளே மனிதன் செய்யும் காரியங்களில் ஊக்கத்தையும் துடிப்பையும் அளிப்பதால் தேவையான அளவு ரஜோ குண சக்திகளைப் பெறுவதும் இன்றியமையாததே. ஆனால் எது ஒருவருக்கு எவ்வளவு தேவை என்பதை எந்த மனிதனும் அளந்து கூற முடியாது அல்லவா? இதைத்தான் பெரியோர்கள் அனைத்தையும் இறைவன் பொறுப்பில் விட்டு விட்டால் நமக்குத் தேவையான அனைத்தையும் இறைவனே அளித்து விடுவான் என்று தெய்வீகத்தை எளிமைப்படுத்திக் கூறியுள்ளார்கள். இம்முறையில் ஆமூர் திருத்தலத்தில் உறையும் நந்தியெம்பெருமான் காலை கதிரவனின் ரஜோகுண சக்திகளை பக்தர்களுக்கு ஏற்ற முறையில் மாற்றி அருள் வழங்குகிறார். இதையே சித்தர்கள் பகலும் இரவும் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு விகிதத்தில் அமைந்திருக்கும் என்று எளிமையாக விவரிக்கிறார்கள்.



நந்தி மூர்த்தி, ஆமூர் சிவத்தலம்
காலை சுமார் ஒன்பது மணிக்குள் பவள மல்லி, செம்பருத்தி, செவ்வரளி போன்ற மலர்களால் இந்த நந்தி பகவானை அர்ச்சித்து பூபாளம், மலயமாருதம் போன்ற ராகங்களில் அமைந்த இறை கீர்த்தனைகளை இசைப்பதால் இரத்த சோகை, இரத்தபுற்று (Blood cancer) போன்ற நோய்கள் நயம் பெறும். ஏனோதானோ என்று வாழ்க்கையில் எந்தவித பற்றுமில்லாமல் இருக்கும் ஆண்களும் பெண்களும் புதுவித உற்சாகத்துடன் மறுமலர்ச்சி பெறுவார்கள்.



ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள்.
காலவ மகரிஷி சுவாமியின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம் அல்லவா ? இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள் முதல் திருமகளை திருமணம் புரிந்தபோது லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும் பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது ஸ்ரீதட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம். அந்த தெய்வீக காட்சியைக் கண்ட தேவர்கள் எல்லாம் மணம் குளிர்ந்து ஸ்ரீதட்சிணா மூர்த்தி, காலவ மகரிஷி, பெருமாள் தம்பதிகள் மேல் மலர்கள் தூவி வணங்கினார்கள். அன்று முதல் ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தி ஸ்ரீதிருவதன தட்சிணா மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். சித்தர்கள் கொண்டாடும் புன்னகை மன்னன் இவரே ! கொவ்வைச் செவ்வாய் குமிழ் சிரிப்பு நாயகனும் இவரே !!



ஸ்ரீநர்த்தன கணபதி ஆமூர் திருத்தலம்
எனவே இறைவனின் விரல் அசைந்தால் ஆயிரம் அர்த்தம், உதடு அசைந்தால் ஒரு கோடி அர்த்தம்.
ஸ்ரீதிருவதன தட்சிணா மூர்த்தியைப் போல பெருமாளும் லட்சுமி தேவியும் புன்னகை புரிய அப்போது தோன்றியதே பெருமாளின் அழகிய மணவாளன் தரிசனம். எனவே திருமணமானவர்கள் முதன் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே ஸ்ரீதிருவதன தட்சிணா மூர்த்தி ஆவார். இங்கு தரிசனம் பெறும் புதுமணத் தம்பதிகளுக்கு மற்றோர் ஈடுஇணையற்ற பாக்கியமும் காத்திருக்கிறது.
தம்பதிகள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தியையும் காலவ மகரிஷியையும் வணங்கும்போது அது குபேர திசையான வடக்கு நோக்கி அமைவதால் காலவ மகரிஷியின் 360 திருமகள் தேவிகளின் ஒருமித்த லட்சுமி கடாட்ச சக்திகளுமே அவர்கள் மேல் குபேர நிதியாக பொழியும். இதைவிட சிறந்த பாக்கியத்தை ஒருவர் எங்கு பெற முடியும் ?



ஸ்ரீஅகத்திய விநாயகர் தின்னகோணம்
தின்னகோணம் திருத்தலத்தில் உறையும் விநாயகப் பெருமான் காலம் கடந்து நிற்கும் சுயம்பு மூர்த்தி.
ஸ்ரீஅகத்திய பெருமானுடன் சேர்ந்தே அவதாரம் கொண்டமையால் இவர் ஸ்ரீஅகத்திய விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார். எம்பெருமான் அரியும் சிவனும் சேர்ந்த தெய்வீக தான்யமாக அரிசியை உருவாக்கினார். அப்போது அனைத்தும் சுத்தமாய் உருவெடுத்த ஒரு தூய்மையான சக்தியை தன் அகத்தினுள் இருந்து தோற்றுவிக்க அது ஆஷாசுவாசினி தேவியின் அனுகிரகத்தால் அகத்திய முனிவராய் தோன்றியது. தேவியானவள் முதல் அரிசி மணியை அகத்திய பெருமானின் உள்ளங்கையில் இட அது மலையாய் வளர்ந்து குவிந்தது. அந்த நெல் மணிகளை எல்லாம் முதலில் மூல முதற் கடவுளுக்கே அர்ப்பணிக்க திருவுள்ளம் கொண்டார் அகத்திய பெருமான். முனிவரின் அன்பு உள்ளப் பாங்கை உணர்ந்த எம்பெருமான் தன்னுடைய அகத்திலிருந்து ஒரு பிள்ளையார் மூர்த்தியை உருவாக்கி உலகிற்கு அளித்தார். இவ்வாறு சிவபெருமானால் உலகிற்கு முதன் முதலில் அளிக்கப்பட்ட சுயம்பு விநாயக மூர்த்தியே தின்னகோணத்தில் அருள்புரியும் ஸ்ரீஅகத்திய விநாயகர் ஆவார். அகத்திய பெருமானும் பேருவகையுடன் அந்த நெல் மணிகளை விநாயக மூர்த்திக்கு அர்ப்பணிக்க அவை மேலும் மேலும் வளர்ந்து உலகெங்கும் வியாபித்து மக்களுக்கு உணவு அளிக்கும் சஞ்சீவி சக்தியாக மாறியது. அன்று முதல் தின்னகோணம் திருத்தலம் திருநெற்குன்றம் என்ற பெயரையும் பெற்றது.



தூங்கானை விமானம் தின்னகோணம்
அரிசி மணிகள் குவிந்தன இறையருளால். அடுத்து தொடர்ந்து நெற்மணிகள் விளைவதற்கு நீர் வேண்டும்
அல்லவா ?
நீரின்றி அமையாதே உலகு. எதையும் வேண்டும்போது வேண்டியவுடன் அளிப்பவர்தானே இறைவன். ஆனால், நெல் உருவாவதற்கு முன் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கு தேவையான ஏற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றி முடித்திருந்தார் பூலோகத்தில் ஒரு ரிஷி. அவரே ஸ்ரீசுதீக்ஷண மகரிஷி. ஆம், சுதீக்ஷண மகரிஷியே முதன் முதலில் பூலோகத்திற்கு நீரை கொண்டு வந்த தியாகி. அவர் பல கோடி ஆண்டுகளாக தவம் இயற்றி தன்னுடைய புண்ணிய பலன்களை எல்லாம் தாரை வார்த்து பூமியின் மேல் வர்ஷிக்க அது ஒரு சிறு வேப்பங் கன்றாய் உருவெடுத்தது. அந்த வேப்ப மரச் செடிக்கு மேலும் மேலும் தன்னுடைய புண்ணிய சக்திகளை தாரை வார்த்து அளிக்க பல கோடி ஆண்டுகள் கழித்து ஒரே ஒரு துளி நீர் வானத்திலிருந்து பூமியில் மேல் விழுந்தது. அதுவே உலகின் முதன் முதலில் தோன்றிய நீர்த் துளி, இறைவனின் பேரருள் பிரசாதம், சுதீக்ஷண மகரிஷியின் தியாகச் சுடர். அந்த முதல் நீர்த் துளியை சுதீக்ஷண மகரிஷி தனது வலது உள்ளங்கை நடுவில் தாங்கி தன் இதயரேகை ஸ்பர்சத்துடன் அந்த ஒரு துளி நீரை ஒரு பசுவிற்கு அளித்தார். உடனே தோன்றியது பூமியின் மேல் முதல் அமுத மழை. இதுவே நீர், மழை பூமியில் தோன்றிய வரலாறு.



ஸ்ரீஅகத்திய பெருமான், தின்னகோணம்
ஸ்ரீசுதீக்ஷண மகரிஷியின் அருந்தவப் பயனால் முதன் முதலில் நீர் இந்த பூமண்டலத்தில் தோன்றியதால் நீரை பயன்படுத்தும்போதெல்லாம் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷிக்கு நன்றி கூறி நீரை பயன்படுத்துவதால் நீர் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். நெல்மணியும் நீரும் பெருக அப்புறம் என்ன ? நெல் தானிய விவசாயம் பெருக ஆரம்பித்தது. இவ்வாறு முதன் முதலில் தோன்றிய நெல் ரகத்தின் பெயரே மண்ணச்சி சம்பா. இது விளைந்த இடம் தின்னகோணம் அருகில் உள்ள மண்ணச்ச நல்லூர் ஆயிற்று. மண் விரும்பும், மனம் விரும்பும், இதய சக்திகள் குடி கொண்ட நெல் ரகம் என்பது இதன் பொருள். முதலில் தோன்றியபோது இந்த நெல்லின் சாகுபடி காலம் 120 நாட்களாக இருந்தது.
எப்போதும் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஒரு விஷயத்திற்கு நன்றி கூறும் பாங்கும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். இவ்வாறு ஸ்ரீஅகத்திய முனிவர், ஸ்ரீசுதீக்ஷண மகரிஷி, ஸ்ரீஅகத்திய விநாயகர் இவர்களுக்கு நன்றி கூறும் முகமாக முதன் முதலில் திருஅண்ணமலையில் அகத்திய ஆஸ்ரமம் நிர்மாணித்தவுடன் 1993ம் ஆண்டு நிகழ்த்திய முதல் கார்த்திகை தீப அன்னதான வைபவத்தில் மண்ணச்சி சம்பா நெல் மணிகளைக் கொண்டே கிரிவலம் வரும் அடியார்களுக்கு அனனதானம் பிரசாதம் படைத்தார் என்பது குரு காட்டிய சுவையே !



இவ்வாறு மலைபோல் திருநெற்குன்றமான தின்னகோணத்தில் குவிந்த நெல்மணிகளை எல்லாம்
அன்னதானமாக அருகிலுள்ள கோபுரப்பட்டி, திருவெள்ளறை போன்ற பெருமாள் தலங்களில் அளித்தனர் அக்கால பக்தர்கள். அப்போது திருவெள்ளறை திருத்தலத்தில் புளியமர தோப்புகள் பெருகி இருந்தன. இறைவனுக்கு ஆறு காலமும் புளியோதரை நைவேத்யமும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் அந்த புளியோதரை பிரசாதத்தை ஏற்று உண்டு பெருமகிழ்ச்சி பெற்றனர். நல்லூர் சம்பாவும் வெள்ளறை புளியும் உவட்டா அமுதே என்பது முதுமொழி.
அமுது கூட திகட்டி விடும் ஆனால் மண்ணச்சநல்லூர் சம்பா அரிசி திருவெள்ளறை புளி கூடிய பிரசாதம் திகட்டாது என்பர் பெரியோர். திருவெள்ளறை புளிக்கு மற்றோர் இனிய சுவையும் உண்டு. புளியம்பழம் உயரிய சன்னியாச தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக அமைவது. நன்றாக முதிர்ந்த பழம் ஓட்டுடன் ஒட்டாது தனித்திருக்கும். அது போல உத்தம சன்னியாசி என்பவன் உலக பந்தங்களுடன் வாழ்ந்தாலும் அவர்களிடம் ஒட்டாமல் வாழ்வதே உயர்ந்த சன்னியாச நிலையாகும். திண்டிவன திருத்தலத்தின் தலமரம் புளி. ஒருமுறை அத்தலத்திற்கு வருகைபுரிந்த ஆதிசங்கரர் அதன் தெய்வீகத் தன்மையைக் கண்டு பிரமித்து விட்டார். அது போன்ற மற்றோர் புளிய விருட்சத்தை காண முடியுமா என்று தான் சென்ற இடமெல்லாம் தேடிப் பார்த்தாராம். தன்னுடைய 16 வயதில் ஆயுள் முடியும் காலத்தில் வசிஷட முனிவரின அறிவுரையின் பேரில் திருவெள்ளறை திருத்தலத்தை அடைந்த ஆதிசங்கரருக்கு அங்கிருந்த ஒவ்வொரு புளியமரமுமே பெருமாளாக காட்சி அளித்தனவாம்.



ஸ்வர்ணாகர்ஷன பைரவ மூர்த்தி, தின்னகோணம்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார் ஆதிசங்கரர். “ஒன்றைத் தேடி வந்தேன் ஓராயிரம் கண்டேன்,” என்று மகிழ்ச்சி பெருமிதத்தில் கூறினார் ஆதிசங்கரர். ஒரு புளிய மரத்தை தேடி வந்த நான் ஆயிரமாயிரம் புளியமரங்களை திருவெள்ளறை திருத்தலத்தில் கண்டேன் என்பது மேலோட்டமான பொருள். இதன் ஆழ்ந்த கருத்து. அத்வைதம் என்று தன்னில் தானாய் இருக்கும் தத்துவத்தில் மூழ்கிய நான் இறைவனின் அடிமையாக அவனுடைய ஆயிரமாயிரம் கல்யாண குணங்களை இரசிக்கும் பேறு பெற்றேன் என்பதே. அதன் விளைவாக எழுந்ததே ஆதிசங்கரரின் பஜகோவிந்த தோத்திர மாலை.
ஆமாம், சுதீக்ஷண மகரிஷி அரும்பாடுபட்டு வளர்த்த வேப்பமரம் என்னவாயிற்று ? தெய்வீகத்தில் நம்முடைய எந்த முயற்சியும் வீண் போவதில்லை. ஸ்ரீசுதீக்ஷண மகரிஷியின் தவப்பயனால் விளைந்த வேப்பமரமே இன்று தின்னகோண சிவாலயத்தில் நந்தீஸ்வர மூர்த்தியாக கம்பீரமாக எழுந்தருளி உள்ளார். அம்மகரிஷியின் திருக்கரங்களால் அளித்த முதல் அமுத துளியை அருந்திய பசுவே இன்று பசுபதீஸ்வர மூர்த்தியாக சுயம்பு சக்தியாக தின்னகோண திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளது. கிடைத்தற்கரிய தெய்வீகப் பொக்கிஷம்.



V is Vilwam ! V is Victory !! V is Venkataraman !!!
வெற்றிதரும் வில்வ மரக் காட்சி தின்னகோணம்
திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் உள்ள பாத்திரங்கள், மேஜை, நாற்காலி போன்ற பல பொருட்களிலும் R.V.V. என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இது ஏதோ அடையாளத்திற்காகப் பயன்பட்டாலும் இதன் பின்னணியில் உள்ள ஆன்மீக இரகசியங்கள் சுவையானவையே. RVV என்பதை விரிக்க அது Royapettah Viswanathan Venkataraman ஆகும். அதாவது உயர்நிலையில் உள்ள அகிலாண்ட நாயகனின் செல்வம் என்பது ஒரு பொருள். அடுத்து R is plural for is. Victory for all. அடுத்து RVV எண் கணிதப்படி 2+6+6=14=5 அதாவது பஞ்சாட்சரத்தின் ஆங்கில குறியீடு. என்னே சற்குரு சிவனின் கருணை கடாட்சம்.
திருமணம், நிலபுலம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரயங்களை ஆரம்பிப்பதற்கு முன் இந்த வில்வ மரங்களை 21 முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்குவதால் காரியத் தடைகள் நீங்கி சாதகமான முடிவுகள் கிட்டும். பைரவருக்கு எதிரே இந்த வில்வ மரங்கள் நிலவுவதால் காலம் தொடர்புடைய பிரச்னைகள் குறிப்பாக முகூர்த்த நேர கணிப்புகளில் ஏற்படும் குழப்பங்கள் தீர்வு பெறும்.
வெற்றி தரும் விஜய வில்வமே இவை.



ஸ்ரீகோவிந்தவல்லி அம்மன் தின்னகோணம்
தின்னகோண திருத்தலத்தில் எழுந்தருளிய சுயம்பு விநாயகப் பெருமான் நெல்மணிகளை நெல்மலைகளாகக் குவித்தார் அல்லவா ? அத்தோடு அவர் லீலை நின்றுவிட வில்லை. தன்னுடைய தம்பி சுப்ரமண்யனுக்கு வள்ளியை திருமணம் முடிக்க யானையாய் சென்றவரும் இந்த மூர்த்தியே. விநாயகப் பெருமான் யானை வடிவில் எழுந்தருளியதற்கு பற்பல இரகசியங்களும் அனுகிரக சக்திகளும் உண்டு. இன்றும் இந்த விநாயக மூர்த்தியை நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் பக்தர்களின் கனவில் யானை உருவில் சென்று அருள் வழங்குகிறார். மூன்றாம் ஜாம இறுதியில் அதாவது கிட்டத்தட்ட விடியற்காலை மூன்று மணி அளவில் இவருடைய தரிசனத்தை கனவில் பெறலாம். மூன்று மணிக்கு மேல் பிரம்ம முகூர்த்த நேரம் அமைவதால் பிரம்ம முகூர்த்த விநாயகர் என்றும் இவரை அழைப்பதுண்டு. முதலில் எம்பெருமானின் வாகனமாக அமைந்தவர் யானை வடிவ நந்தி மூர்த்தியே. நந்தி என்பது வாகனத்திற்கான பொதுப் பெயர். எனவே இறைவனின் முதல் நந்தி வாகனம் யானையே. இன்றும் யானையை நந்தி வாகனாக உடைய திருத்தலங்களில் இறைவனை வழிபடுவதால் அற்புத லட்சுமி கடாட்ச சக்திகளையும் காரிய தடங்கல் நிவர்த்தி சக்திகளையம் அனுகிரகமாக பெறலாம்.



முதன் முதலில் விநாயக மூர்த்தி தோன்றிய தலமாதலால் இத்தல விமானமும் தூங்கானை அமைப்பில் உள்ளது
என்பதை நீங்கள் இரசித்து மகிழலாம். தூங்கா ஆனை என்பதே தூங்கானை. இதன் பொருள் என்ன ? முதலில் தெய்வீகத்தில் ஈடுபாடு கொள்ளும் பக்தர்கள் இரவில் உறங்கும் முன் இறைத் துதிகளை, தெய்வீக பாடல்களைப் பாடியவாறே உறங்க வேண்டும். இதனால் காலையில் எழும்போது இறை நினைவுடன் எழுந்திருக்கலாம். ஆனால், தெய்வீகத்தில் ஈடுபாடு முதிர்ந்த நிலையில் இறை நினைவு கூடியவாறே துயில் எழ வேண்டும். இதையே சம்பந்த மூர்த்தி நாயனார், “நினைத்தெழுவார் இடர்களையாய் ..” என்கிறார். எழுந்து நினைப்பது பக்தியின் ஆரம்ப நிலை, நினைத்து எழுவது பக்தியின் முதிர்ந்த நிலை. இதுவே தூங்கானை நிலை. இவ்வாறு பக்தியின் ஆரம்ப நிலையிலிருந்து முதிர்ந்த நிலைக்கு வரும் பக்தர்கள் முதலில் பெறுவதே தின்னகோண விநாயக மூர்த்தியின் தரிசனம். இதை உணர்த்துவதாகவே இத்தல தூங்கானை விமானமும் உள்ளது.
மேலும் குதிரைக்கு முன் வந்தது கழுதை என்பது போல பசுவிற்கு முன் வந்ததே யானை என்பதே சித்தர்கள் உணர்த்தும் இரகசியம். இன்றும் பல திருத்தலங்களில் இந்த உண்மையை உணர்த்துவதாக யானையும் பசுவும் ஈருடல் ஒரு தலையுடன் விளங்கும் சித்திரங்களை, சிலாரூபங்களை காணலாம். உதாரணம் மலைக்கோட்டை தாயுமானவர் கோயில்.



ஸ்ரீவிநாயக மூர்த்தி, தென்திருமுல்லைவாயில், சீர்காழி அருகே
இலவணசமுத்திரம் என்ற ஒரு மூலிகை உண்டு. எத்தகைய விஷமுள்ள பாம்பு கடித்து விட்டாலும் இந்த மூலிகையின்
ஒரு இதழை மென்று தின்று விட்டால் உடனே விஷம் இறங்கி விடும். ஆனால், ஆரோக்கிய நிலையில் உள்ள ஒருவர் இந்த மூலிகையை உண்டு விட்டால் உடலில் உப்பு சக்தி அதிகரித்து மரணம் சம்பவித்து விடும். இலவணம் என்றால் உப்பு. இதற்கு மாற்று வைத்தியம் கிடையாது. எனவே இந்த இலவணசமுத்திர மூலிகை பற்றிய விவரங்களை மிகவும் இரகசியமாக வைத்துள்ளனர் சித்த வைத்தியர்கள். இந்த மூலிகைக்கு அற்புத வசிய சக்தியும் உண்டு. இதில் குளிகை செய்து ஆண் பெண் வசிய மருந்தாக உபயோகிப்பதும் உண்டு. முற்காலத்தில் அன்னிய நாடுகளின் அரசியல் இரகசியங்களை அறிந்து கொள்ள ஒற்றர்கள் இந்த வசிய குளிகையை உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால், சித்தர்கள் இத்தகைய வசியங்களை ஏற்றுக் கொள்வதில்லை. கணவன் மனைவியரிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தும் வசியம் ஒன்றையே அவர்கள் அங்கீகரிப்பதால் குடும்பத்தில் மன ஒற்றுமையை ஏற்படுத்தும் எத்தனையோ திருத்தலங்களைப் பற்றிய இரகசியங்களை அவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். அவற்றில் ஒன்றே சீர்காழிக்கு கிழக்கே சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள தென்திருமுல்லைவாயில் திருத்தலமாகும்.



ஸ்ரீமுல்லைவன நாதர், திருமுல்லைவாசல்
இலவணசமுத்திரம் மூலிகை தரும் வசிய சக்தியை அளிக்கவல்லதே திருமுல்லைவாசல் தலத்தில் நிலவும் இலவணபிரகாச சக்திகளாகும். திருமுல்லைவாசல் திருத்தலத்தில் சக்கர தீர்த்தம் என்பது கோயிலுக்கு இடப்புறம் உள்ளது. கோயில் எதிரே உள்ள கிழக்கு கடற்கரை பகுதி இலவண பிரகாச சக்திகளுடன் திகழ்கின்றது. உப்பிற்கு எதிர்மறை சக்திகளையும், தீய எண்ணங்களையும் ஈர்க்கும் சக்தி அதிகம். அதனால்தான் விருந்து பரிமாறும்போது முதலில் இலையில் இடது கைப்பக்கம் முதலில் சிறிது உப்பை வைப்பார்கள். இது அடுத்து பரிமாறும் உணவுப் பதார்த்தங்களில் நிலவும் தீய எண்ண சக்திகளை களைந்து விடும். சூரியன் காலையல் உதயமாகும்போது அதன் கிரணங்கள் முதலில் இந்த கடல் நீரில்பட்டு பிரதிபலிக்கும்போது அதில் உள்ள எதிர்மறை சக்திகள் களையப்படுவதால் புனிதமான தூய சூரிய கிரணங்கள் மட்டுமே திருமுல்லைவாசல் ஈசன் மீது படியும். அப்போது ஈசனால் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாத கிரணங்கள் இலவண பிரகாச சக்தி உடையவையாக இருக்கும். இந்த இலவண பிரகாச சக்திகள் கணவன் மனைவியரிடையே அன்யோன்ய வசியத்தை ஏற்படுத்தி குடும்ப ஒற்றுமையை வளர்க்கும்.



கிளுவையை சுற்றி வளரும் முல்லைக் கொடி, திருமுல்லைவாசல்
திருமுல்லைவாயில் திருத்தலத்தின் தலவிருட்சம் முல்லைக்கொடி ஆகும். கொடி என்றால்
கொம்பைச் சுற்றி வளர்வதுதானே. எனவே இந்த முல்லைக் கொடியின் தரிசனமே கணவன் மனைவியரிடையே நிலவும் எத்தனையோ மனவேறுபாடுகளைக் களையும் சக்தி பெற்றது. கிளுவை என்பது ஒரு வகை வில்வமே. இது சிவராத்திரி வழிபாட்டில் இரண்டாம் கால பூஜையில் இறைவனை அர்ச்சிக்க வேண்டிய மூலிகையாகும். இரண்டாம் ஜாமமே தம்பதிகளின் சங்கமத்திற்கு உரிய காலமாகும். இவ்வாறு இறைவனுக்கு நிறைவேற்றும் ஒவ்வொரு பூஜை முறையும் மனிதர்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்து உள்ளது என்பதும் கிளுவை முல்லை காட்டும் இறை தத்துவமாகும்.
தம்பதிகளுக்கு இலவண பிரகாச சக்திகளை அளிக்கும் மற்றோர் பூஜையும் உண்டு. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் இந்த பூஜையை நிறைவேற்றலாம். காலையில் சூரிய உதயத்திற்கு முன் ஒரு நாழிகைக்கு முன் கிழக்கு நோக்கி ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்ள வேண்டும். சூரியனைப் பார்க்காது வாய் விட்டோ மனதிலோ காயத்ரீ மந்திரங்களையோ வேத மந்திரங்களையோ பாராணம் செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்குப் பின் ஒரு நாழிகை காலம் வரை வேதம் ஓதுவதைத் தொடர் வேண்டும். ஆனால், சூரியனைப் பார்க்கக் கூடாது. இவ்வாறு சூரிய உதய நேரத்தில் நிறைவேற்றும் இரண்டு நாழிகையான 48 நிமிட பூஜைகள் அற்புதமான இலவண பிரகாச சக்திகளைப் பெற்றுத் தரும். தம்பதி சமேதராய் இந்த பூஜையை நிறைவேற்றுதல் சிறப்பு.



ஸ்ரீதட்சிணாமூர்த்தி, திருமுல்லைவாயில்
இலவண பிரகாச சக்திகளைப் பெற கடற்கரையில் வீணை வாத்யங்களைக் கொண்டு இறைக் கச்சேரிகளை நிகழ்த்துவது சமுதாயத்தில் அமைதியை நிலை நாட்டும் வழிபாடாக அமையும். குறிப்பாக ரகுப்ரியா ராகத்தில் அமைந்த முத்துசுவாமி தீட்சிதர் அருளிய ஹிமகிரிகுமாரி ஈஸ்வரி ... என்று தொடங்கும் கீர்த்தனையை இசைப்பதால் குடும்பத்தில், அலுவலகத்தில் தோன்றும் கொந்தளிப்புகள் மறையும். சூறாவளி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களும் தணியும். இலங்கைக்கு பாலம் அமைப்பதற்காக இராமபிரான் சமுத்திர ராஜனின் அனுமதியை கோரியபோது சமுத்திர ராஜன் ராமரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்பதை அறிந்த ராமர் கடுங்கோபத்துடன் சமுத்திர ராஜன் மீதே ராமபாணத்தை தொடுக்க எண்ணியபோது சமுத்திர ராஜன் ராமபிரான் முன் பிரசன்னமாகி தன்னுடைய தவறைப் பொருத்தருறுமாறு வேண்டினான். அப்போது ராமபிரானின் கோபத்தை தணிப்பதற்காக ரகுப்ரியா ராகத்தில் அமைந்த தோத்திரங்களை மச்சயாழ் கொண்டு இசைத்தான் என்பது நம் முன்னோர்கள் தெரிவிக்கும் ராமகாவியம்.



இலவண பிரகாச தீர்த்தம் திருமுல்லைவாயில்
இலவண பிரகாச சக்திகளை காலையில் சூரிய உதய காலத்திற்கு முன்னும் பின்னுமாக உள்ள 48 நிமிட நேரத்தில் விரவும் முகூர்த்த நேரத்தில் பெறலாம் என்று விளக்கினோம் அல்லவா ? இந்த முகூர்த்த நேரத்திற்கு கார்கோடகன் முகூர்த்தம் என்று பெயர். கார்கோடகன் என்பது நமது பூமியைக் காக்கும் நாக தேவதையின் பெயர். அந்தரத்தில் சூரியனைச் சுற்றி வரும் பூமி தன்னுடைய பாதையிலிருந்து விலகிச் சென்று விடாமல் பூமியை நிலை நிறுத்துவது ஆதிசேஷனின் நாக சக்தியாகும். அதேபோல அந்தரத்தில் உள்ள பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர், தாவரங்கள், ஜீவன்கள் கீழே விழுந்து விடாமல் நிலை நிறுத்துவது கார்கோடக நாக சக்தியாகும். இதுவே சித்தர்கள் கூறும் மெய்ஞ்ஞான விளக்கமாகும்.
ஒரு முறை பௌர்ணமியின் போது மாலை நேரம் திடீரென்று காற்று வேகமாக வீசி கனத்த மழையும் பெய்யத் தொடங்கியது. கிரிவலப் பாதையில் அவ்வளவாக அடியார்களின் நடமாட்டமில்லை. அப்போது நமது ஆஸ்ரமத்தின் எதிரே அலை அலையாக பாம்பு வேகமாக நெளிந்து செல்வதைப் போல காற்றின் அசைவுகள் இருந்தன. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு நிலவிய இந்த அதிசய சம்பவம் குறித்து நமது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடம் கேட்டபோது, “உங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் இது. கார்கோடகன் நாகம்தான் இன்றைக்கு சுவாமியை கிரிவலம் வந்தார். ஆனால் அவர் மேல் பட்ட காற்றில் சிறிதளவு நம் மேல் பட்டால் கூட அது நம்மை அந்தரத்தில் தூக்கிச்சென்று எங்காவது போட்டு விடும். அவ்வளவு சக்தி உடையது அவருடைய கிரிவல வேகம். அந்த வேகத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக வருண பகவான் ஒரு கன மழையை உருவாக்கி கார்கோடக நாகத்தின் இரு பக்கங்களிலும் அணைத்துச் சென்றார்.” என்றார் சற்குரு.



ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை, திருமுல்லைவாசல்
மேலும் கார்கோடக நாகம் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது அதனுடைய நீளம் பூலோகக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்பதையும் கணித்துக் கூறினார். எப்படி ? நமது ஆஸ்ரமத்தை கார்கோடகன் கடந்து செல்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம் 48 நிமிடங்கள். நாகம் சென்ற வேகம் மணிக்கு 60 மைல்கள். அப்படியானால் கார்கோடகனின் நீளம் சுமார் 48 மைல்கள் ! இதை வைத்து கார்கோடக நாகத்திற்கு அமையும் திருஅண்ணாமலையின் கிரிவலப் பாதை எவ்வளவு நீளம் உடையது என்பதையும் கணித்து விடலாம். அதாவது நமது ஆஸ்ரமம் அமையும் பகுதி வாயுலிங்கத்திற்கும் குபேர லிங்கத்திற்கும் இடைப்பட்ட தூரத்தில் பன்னிரெண்டில் ஒரு பங்கு. அப்படியானால் கார்கோடக நாகம் திருஅண்ணாமலையை வலம் வர கடந்து செல்ல வேண்டிய தூரம் 48 x 12 x 7 = 4032 மைல்கள். இவ்வாறு ஒவ்வொரு தேவதைக்கும் அவதார மூர்த்திகளான ஆஞ்நேயர் போன்றோருக்கும் அமையும் திருஅண்ணாமலை தூரத்தை கணக்கிடும் முறையை விளக்கினார் சற்குரு. அன்று கார்கோடக நாகத்தின் தரிசன பாக்கியம் பெற்ற அடியார்கள் இன்றும் பலர் நம்மிடையே உண்டு. இதுவே கார்கோடக முகூர்த்தம் அமையும் 48 நிமிடங்கள் குறித்த இரகசியமாகும்.



கார்கோடக நாகம் என்பது நாம் நினைப்பது போல் ஒரே ஒரு நாகம் கிடையாது. அது அந்த குலத்தைச் சேர்ந்த ஒரு கோடிக்கு மேற்பட்ட நாக குலத்திற்கு உரிய பெயராகும். இவ்வாறு தன்னுடைய வம்சத்தைச் சேர்ந்த அனைத்து நாகங்களும் நலமாய் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருமுல்லைவாயில் திருத்தலத்தில் உள்ள சக்கர தீர்தத்தில் தவம் இயற்ற ஆரம்பித்தது கார்கோடகன். எதற்கு சக்கர தீர்த்தத்தை அது தேர்ந்தெடுத்தது ? 2D சக்கரத்தின் 3D வடிவம்தானே கோளம், பூகோளம் ? இவ்வாறு பல யுகங்கள் அன்ன ஆகாரமின்றி சக்கர தீர்த்தத்தில் தவமியற்றிய கார்கோடக நாகத்தை தன் வலது கையில் ஏந்தி அதற்கு ஆசி அளித்தார் இத்தல ஸ்ரீதட்சிணா மூர்த்தி. ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் வலது கையில் கார்கோடக நாகம் அலங்கரிப்பதை இன்றும் தரிசனம் செய்து மகிழலாம். கார்கோடகனின் தவத்தை மெச்சி இறைவன் கார்கோடக முகூர்த்தத்தையும் அனுகிரக சக்தியாக அளித்தார்.



சக்கர தீர்த்தம் திருமுல்லைவாயில்
இந்திரனும் சக்கர தீர்த்தத்தில் தவமியற்றி சுவாமியின் அனுகிரகத்தைப் பெற்றான். அவ்வாறு தான் பெற்ற அனுகிரகத்தால் அர்ச்சுனனுக்கு நாக வியூகம், சக்கர வியூகம் போன்ற வியூகங்களை தகர்க்கும் யுத்த இரகசியங்களையும் தெரிவித்தான். எத்தகைய கடுமையான நாக தோஷங்களையும் தீர்க்கக் கூடியதே சக்கர தீர்த்தத்தில் இயற்றும் தர்ப்பணமாகும்.
சித்தர்கள் இத்தல சக்கர தீர்த்தத்தில் நிறைவேற்ற வேண்டிய ஒரு அபூர்வமான தர்ப்பண முறையை வகுத்துள்ளனர். ஒரு புதிய மண் சட்டியில் அல்லது பானையில் உயிருள்ள இரண்டுக்கு மேற்பட்ட விரால்மீன்களை விட்டு அந்த மீன்களின் சாட்சியாக தர்ப்பணத்தை அளித்து தர்ப்பணத்திற்கு பின் அந்த மீன்களை தானம் அளித்து விட வேண்டும். இதுவே மச்ச தர்ப்பணம் என்பதாகும். சமுத்திர ராஜனுக்கு மிகவும் திருப்தி அளிக்கக் கூடிய இந்த தர்ப்பணத்தை வெகுகாலம் நிறைவேற்றி சமுத்திர ராஜனின் அனுகிரகத்தையும் நாகலோக தேவதைகளின் ஆசியையும் பெற்றிருந்தான் பீமசேனன். அதனால்தான் பீமன் துரியோதனனின் நாக விஷத்தால் மயக்கம் அடைந்தபோது அவன் நாகலோகம் சென்று உயிருடன் மீண்டு பல அற்புத நாக தேவதைகளின் சக்தியையும் பெற்றான் என்பதே இருடிகள் பாரதம் கூறும் இரகசியமாகும்.



திருமுல்லைவாயில்
திருக்கோயில்களில் கழிவறைகள் அமைத்தல், சாக்கடைகளை கோயில் தீர்த்தங்கள், பொது நீர் நிலைகளுடன் இணைத்தல், கடலில் கழிவு பொருட்களை, இரசாயன கழிவுகளை சேர்த்தல் போன்ற காரியங்களால் சமுத்திர ராஜனுக்கு இழைக்கும் கொடுமைகளுக்கு இந்த மச்ச தர்ப்பண வழிபாடே தகுந்த பிராயசித்தமாக அமைகிறது. சமீபத்தில் நிகழ்ந்த சுனாமி கடல் சீற்றத்தின்போது தன்னை நம்பிய நூற்றுக் கணக்கான அடியார்களின் குடும்பங்களை இத்தையை வழிபாடுகள் மூலமாக சற்குரு வெங்கடராம சுவாமிகள் காத்து இரட்சித்தார் என்பது எவரும் அறியாத இரகசியமாகும். ராமேஸ்வரம், கோடியக்கரை, சாயாவனம் போன்ற கடற்கரைத் தலங்களில் இத்தகைய மச்ச தர்ப்பணங்களை நிறைவேற்றுதல் சிறப்பு. திருவீழிமிழலை போல சக்கர தீர்த்தங்கள் அமைந்த திருத்தலங்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பலன் பெறலாம். மச்சாவதார தலமான மணமேல்குடியில் இத்தகைய வழிபாட்டை நிகழ்த்துவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். மீன் உண்ணும் வழக்கம் உடையவர்கள் சமைத்த விரால் மீன்களை தர்ப்பணத்திற்குப் பின் தானமாக அளிப்பதும் ஏற்யுடையதே.



ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர் திருமுல்லைவாசல்
ஆழ்ந்த குரு பக்தியும் இறை நம்பிக்கையையும் அளிப்பதே இந்த மச்ச தர்ப்பணம் ஆகும். தன்னுடைய ஆழ்ந்த அன்பின் அடையாளமாக ஸ்ரீராமபிரானுக்கு குகன் அளித்த மீன் கொடையை உணர்ந்தால்தான் இந்த தர்ப்பணத்தின் மகிமை புரியும். இதன் அருமையை இராமச்சந்திர மூர்த்தி உணர்ந்ததால்தான் குகனை ஆரத்தழுவிக் கொண்டு, “உம்மோடு ஐவரானோம்,” என்ற வேத வாக்கியங்களை மொழிந்தார். இது வெறும் சகோதரத்துவத்தையும் நட்பையும் குறிக்கும் வார்த்தைகள் மட்டும் அன்று. மச்ச தானம் பஞ்சபூத சக்திகளின் நிறைவான வழிபாடாக அமைந்து அது தோற்றுவிக்கும் அமைதியைக் குறிக்கும் ராமகீதமாகும்.
சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரு அங்கமாக உடலில் உள்ள மச்சங்களை வைத்து குணாதிசயங்களை கூறுவதே மச்ச சாஸ்திரமாகும். இது உண்மையே. ஆனால் இந்த லட்சணங்களை எல்லோராலும் எளிதாக கணித்துவிட முடியாது. முகத்தில் உள்ள மச்சத்தால் பேரும் புகழும் அடைந்தோர் ஏராளம். முகத்தில் உள்ள மச்சத்தால் அருவறுப்பு அடைந்து அத்தகையோர்களை வெறுத்து ஒதுங்குவோரும் உண்டு. எனவே ஒரு மச்சம் தனக்கு சாதகமா அல்லது பாதகமா என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் மேற்கூறிய மச்ச தர்ப்பண வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். புயல், வெள்ளம், கடல் சீற்றம் போன்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பதே மச்ச தர்ப்பணமாக அமைவதால் இதை சமுதாய வழிபாடாக மேற்கொள்வதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம்.



இந்திர லிங்கம், திருமுல்லைவாசல்
இத்தலம் தோன்றிய வரலாறும் அற்புதமானதே. சூரியகாந்தன் என்ற சோழ மன்னன் ஒரு முறை திருமுல்லை வனத்திற்கு வேட்டைக்காக வந்தான். அப்போது அவனுடைய குதிரை ஓரிடத்தில் மேற்செல்ல முடியாமல் நின்று விட்டது. கீழே இறங்கிப் பார்த்த அரசன் ஒரு முல்லைக் கொடி குதிரையின் கால்களைச் சுற்றி இருந்ததைக் கண்டு தன் வாளால் அந்த முல்லைக் கொடியை வெட்டி விட்டு குதிரையை விடுவித்து அரண்மனைக்குச் சென்று விட்டான். ஆனால் அன்று இரவு அவனால் உறங்கவே முடியவில்லை. பயங்கரக் கனவுகள் அவனைத் துன்புறுத்தின. பக்தி மிகுந்த அரசன் ஆதலால் ஏதோ தெய்வீக தவறுகள் நடந்திருக்க வேண்டும் என்று யூகித்து ராஜகுருவை நாடி விளக்கம் வேண்டினான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்த ராஜகுரு மன்னனுடன் திருமுல்லை வனப் பகுதிக்கு வந்து மன்னன் வெட்டிய முல்லைக் கொடியைப் பார்த்தார். பின்னர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அருகில் உள்ள மணற்மேட்டிலிருந்து ஒரு தெய்வீக பிரகாசம் வெளிப்படுவதை உணர்ந்த ராஜகுரு வீரர்களைக் கொண்டு அவ்விடத்தை அகழ்ந்து பார்க்கும்படிக் கூறினார.



ஸ்ரீகஜலட்சுமி திருமுல்லைவாசல்
அங்கே கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அனைவரும் ஹரஹர சிவசிவ என்ற கோஷத்துடன் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். ஆனால், அந்த சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் இருவெட்டுக் காயங்கள் தோன்றி அதிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டே இருந்தது. மன்னன் நெடிப் பொழுதில் அதன் காரணத்தை உணர்ந்து கொண்டான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் வளரும் சிசுவுக்கும் உணவளிப்பவன் மட்டும் இறைவன் கிடையாது. எங்காவது ஒரு சிற்றுயிர் துன்பம் அடைந்தாலும் அதற்காக தன் உதிரத்தைச் சிந்துபவனும் அந்தப் பரம்பொருளே என்ற பேருண்மையையும் உணர்ந்து கொண்டான் மன்னன். தியாகராஜனின் தியாக பூமியே திருமுல்லைவாயில் திருத்தலம். அன்று முதல் முல்லைக்கொடி போன்ற சிற்றுயிர்கள் மீதும் கருணை பொழிய ஆரம்பித்த மன்னன் சூர்யகாந்தனே அடுத்த பிறவியில் முல்லைக்கு தேர் ஈந்த பாரியாகத் தோன்றி புகழ் பெற்றான். வெட்டுக் காயத்துடன் திகழும் மூல மூர்த்தியை இன்றும் தரிசனம் செய்யலாம்.



குகன் என்னும் நாமம் முருகப் பெருமானையும் குறிப்பதுதானே ? அப்படியானால் மச்ச வழிபாடு என்பது முருகனுக்கும் உகந்ததுதானே ? இதை எப்படி நிறைவேற்றுவது ? சமீப காலம் வரை மிகவும் பிரசித்தி பெற்றிருந்த மச்சகாவடி வழிபாடு தற்போது மறைந்து விட்டது என்றே கூறலாம். விரால்மீன்களை சமைத்து இரண்டு புதிய மண் சட்டிகளில் வைத்து சேம இலைகளால் சட்டியை மூடி அதை காவடியாகக் கட்டி பழநி மலைக்கு சுமந்து செல்வதே மச்ச காவடி வழிபாடாகும். அவ்வாறு மச்ச காவடி எடுப்பவர்கள் மிகுந்த நியம நிஷ்டைகள் அனுசரிக்க வேண்டும். நடந்தே சென்று பழநி மலை சென்று அங்குள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தை அடைந்தவுடன் தங்கள் காவடிகளை இறக்கி வைப்பார்கள். அப்போது அந்த மீன்கள் உயிர் பெற்று சரவணப் பொய்கையில் குதித்து விடும். அப்போதுதான் அவர்களின் விரதம் முறையாக நிறைவேறி அதை முருகப் பெருமான் ஏற்றுக் கொண்டு விட்டான் என்று பொருள். அவ்வாறு அந்த மீன்கள் உயிர் பெறவில்லை என்றால் அந்த காவடிக்கு உரியவர்கள் மீன்களை தானமாக அளித்து விட்டு முருகப் பெருமானின் தரிசனம் பெறாமல் தங்கள் ஊருக்கு திரும்பி வந்து விடுவார்கள். தங்கள் விரதத்தில் உள்ள குறைய நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் முருகன் அவர்களை வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளும் வரை நியம நிஷ்டங்களை கடுமையாகக் கடைபிடிப்பார்கள்.



ஸ்ரீவிக்ன கணபதி திருமுல்லைவாயில்
மற்ற வழிபாடுகளைப் போல் குகனுக்கு உரிய மச்ச வழிபாட்டிலும் பக்தர்களுக்கு ஆர்வமும் பக்தியும் குறைந்ததால் காவடிகளில் மீனுக்குப் பதிலாக மீன் வடிவம் பொறித்த காவடிகளை எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். தற்போது அந்த வழிபாடும் அருகி விட்டது. எனவே சுனாமி வருவது ஆச்சரியமான விஷயம் இல்லை, அது வராவிட்டால்தான் ஆச்சரியம் !
விரால் மீனின் தனிச் சிறப்பென்ன ? ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய முதல் அவதாரமான மச்சாவதாரத்தை எடுத்தபோது அவர் விரால் மீன் வடிவில்தான் தோன்றினார். ராமர் சரயு நதியில் மறைந்த இடத்தில் ராம லட்சுமணர்களின் தரிசனத்தை தன்னுடைய சீடர்களுக்கு பெருமாள் பிரசாதமாக ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் பெற்றுத் தந்தபோது அவர்கள் இரண்டு விரால்மீன் வடிவில்தான் தரிசனம் அளித்தார்கள். இதைவிட வேறு என்ன சிறப்பு விராலுக்கு வேண்டும் ?
தாமரை என்பது தூய்மையைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர். தாமரைகளில் பல வகைகள் உண்டு. ஆகாயத் தாமரை பூமிக்கு மேல் 12 அடிக்கு மேல் உள்ள சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. ஓரிதழ் தாமரை என்னும் மூலிகை தரையிலிருந்து 12 அடி உயரம் வரை உள்ள காற்று மண்டலத்தை தூய்மை செய்யும். நிலத்தடி தாமரை என்னும் வெங்காயம் பூமியின் கீழுள்ள நச்சுத் தன்மையை அகற்றும்.



ஸ்ரீசண்டிகேஸ்வரர் திருமுல்லைவாசல்
வெங்காயச் செடிகளை வளர்த்து அதில் பன்றிகளை மேய விடுவதால் நிலம் வளம் பெறும். வீட்டுக் கிணறுகளில் உள்ள நீர் துர்நாற்றத்துடன் விளங்கினால் திண்டுதோசையுடன் வெங்காய கார சட்னி சேர்த்து சனிக்கிழமைகளில் தானம் அளித்து வந்தால் கிணற்று நீர் தூய்மையாகும். மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள், கீழ்நோக்கு நாளில் முறையே ஆகாயத் தாமரை, ஓரிதழ் தாமரை, வெங்காயச் செடிகளின் தரிசனம் பெற்று வந்தால் காரியத் தடங்கல்கள் விலகும்.
இம்முறையில் விரால்மீன் என்பது நீர்வளத் தாமரை என்று சித்தர்களால் பாராட்டப்படுகிறது. தூய நீரின் சூரியத் தாமரை என்பது சித்தர்கள் விரால்மீனுக்கு அளிக்கும் பட்டம். எப்படி சூரியனும் தாமரையும் ஒன்றுக்கொன்று பரஸ்பர நட்புடன் விளங்குகிறதோ அது போல விரால்மீனும் தூய்மையான நீர்நிலையும் ஒன்றுக்கொன்று நட்புடன் விளங்குபவை ஆகும். காரணம் விராலின் தோலில் உள்ள தாமரை சக்திகளே. விரால் மீன் பார்ப்பதற்கு கருமையாகத் தோன்றினாலும் அதனுடைய கருநீல வண்ணம் குமுத லலிதம், கூவிள லலிதம் போன்ற ஏழுவகை லலித சக்திகளால் தோன்றிய வண்ணமாகும். அதனால் விரால்மீன் தோலில் படும் சூரியக் கதிர்கள் இந்த லலித வண்ணங்களால் பிரதிபலிக்கப்படும் போது மீனின் உடலிலிருந்து ஆதித்ய லலிதம் என்ற அற்புதமான ஜோதி கிரணங்கள் வெளியாகின்றன. இந்த கிரணங்கள் நீர் நிலைகளை தூய்மைப்படுத்தி சுற்றுப்புறம் சுகாதாரமாக அமைய வழி வகுக்கின்றன.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam